சென்னை, பிப்.4: சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முகமது கவுஸ் என்பவரை கடத்தி ₹20 லட்சம் பறித்ததாக திருவல்லிக்கேணி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாசிங், வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றும் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி 4 பேரும் தாக்கல் செய்த மனுவை சென்னை அமர்வு முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இந்நிலையில், ராஜா சிங் உள்ளிட்ட 4 பேரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் விவேகானந்தன், எஸ்.சீனிவாசன், மனுதாரர்கள் அனைவரும் 47 நாட்களாக சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டுமென்று வாதிட்டனர். புகார்தாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், புகார்தாரரிடமிருந்து வழிப்பறி செய்யப்பட்ட பணம் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை என்று கூறினார். இதனையடுத்து, 4 பேருக்கும் ஜாமீன் வழங்கிய நீதிபதி வழிப்பறி செய்யப்பட்ட பணத்தை விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
The post ₹20 லட்சம் பறித்த வழக்கில் எஸ்ஐ உள்ளிட்ட 4 பேருக்கு ஜாமீன்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.