2 கணவர்களை பிரிந்து 3வது நபருடன் லிவிங் டூ கெதர்; வீடு புகுந்து இளம்பெண்ணை தாக்கி வாயில் விஷம் ஊற்றி கொல்ல முயற்சி

5 hours ago 3

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளியில் 2 கணவர்களை பிரிந்து 3வது நபருடன் லிவிங் டூ கெதர் முறையில் வாழ்ந்து வந்த இளம்பெண்ணை வீடு புகுந்து தாக்கி வாயில் விஷத்தை ஊற்றி கொல்ல முயன்ற காதலனின் மனைவி கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் ஷாலினி (24). இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த சபரி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணமாகி 6 மாத காலத்திற்குள், அதே கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருடன் ஷாலினிக்கு தகாத உறவு ஏற்பட்டது. இதனால் கணவருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கணவர் சபரியை கைவிட்ட ஷாலினி, பிரகாஷை 2வதாக திருமணம் செய்தார். இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது. 2 வருடம் குடும்பம் நன்றாக சென்றது. திடீரென 2வது கணவன் பிரகாஷூடனும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை பிரிந்த ஷாலினி, தனிமையில் இருந்து வந்துள்ளார்.

பின்னர் பிழைப்புக்காக கோயம்புத்தூருக்கு சென்றுள்ளார். அங்கு வேலை பார்த்து கொண்டிருந்தபோது தம்பிதுரை என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் லிவிங் டூ கெதர் முறையில் வாழ்ந்து வந்தனர். தம்பிதுரையும் போச்சம்பள்ளி அக்ரஹாரம் கிராமத்தை சேர்ந்தவர்தான். தம்பிதுரைக்கு ஏற்கனவே திருமணமாகி நிர்மலா என்கிற மனைவி உள்ளார். அவரும் அதேஅக்ரஹாரம் கிராமத்தை சேர்ந்தவர்.

இந்நிலையில் கோயம்புத்தூரிலிருந்து திரும்பி வந்த ஷாலினியும் தம்பிதுரையும் புலியூர் கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து கடந்த 2 மாதங்களாக கணவன்-மனைவி போல் வசித்து வந்துள்ளனர். அதேநேரத்தில் தம்பிதுரை, மனைவி நிர்மலாவின் வீட்டுக்கும் சென்று வருவார். ஆனால் நிர்மலாவுக்கு கணவரின் தகாத உறவு பற்றி தெரியாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக கணவரின் நடவடிக்கையில் நிர்மலாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. கடந்த 13ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற தம்பிதுரையை, தனது உறவினர்கள் 10 பேருடன் காரில் நிர்மலா பின்தொடர்ந்தார். அப்போது புலியூரில் உள்ள காதலி ஷாலினி வீட்டுக்கு தம்பிதுரை சென்றபோது, அவரை நிர்மலா மற்றும் உறவினர்கள் கையும் களவுமாக பிடித்து விசாரித்தனர். அப்போதுதான் ஷாலினிக்கும் தம்பிதுரைக்கும் தகாத உறவு இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் இருவரையும் சரமாரியாக தாக்கினர். சத்தம் கேட்டு அங்கு வந்த வீட்டின் உரிமையாளர், கணவன்-மனைவி என இருவரும் கூறியதால்தான் வாடகைக்கு வீட்டை விட்டதாகவும் உடனடியாக வீட்டை காலி செய்யும்படியும் கூறியுள்ளார்.

இதையடுத்து அன்றே வீட்டில் இருந்த பொருட்களை காரில் ஏற்றிக்கொண்டு தம்பிதுரை, ஷாலினி ஆகியோரை நிர்மலா தரப்பினர் காரில் ஏற்றி சென்றுள்ளனர். அப்போதும் இருவரையும் காரில் வைத்து தாக்கியதாக தெரிகிறது. பின்னர் ஆனந்தூர் கிராமத்திற்கு சென்றபோது, நிர்மலா, தான் கையில் வைத்திருந்த விஷத்தை வலுக்கட்டாயமாக ஷாலினி வாயில் ஊற்றியதாக கூறப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த ஷாலினியை 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு போலீசாரிடம் ஷாலினி கொடுத்த தகவலின் அடிப்படையில், போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான நிர்மலா மற்றும் 10க்கும் மேற்பட்ட உறவினர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று நிர்மலா, தம்பிதுரை ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் உறவினர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மருதமலை படத்தில் வரும் காட்சி போல், ஷாலினிக்கு 3வது கணவருடனும், தம்பிதுரைக்கு 2வது மனைவியுடனும் இருந்த காதல் குழப்பத்தில் முடிந்தது. தொடர்ந்து இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அக்கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post 2 கணவர்களை பிரிந்து 3வது நபருடன் லிவிங் டூ கெதர்; வீடு புகுந்து இளம்பெண்ணை தாக்கி வாயில் விஷம் ஊற்றி கொல்ல முயற்சி appeared first on Dinakaran.

Read Entire Article