சென்னை: கடந்த 4 ஆண்டுகளில் 2,37,88,375 சுய உதவிக் குழு மகளிருக்கு ரூ.1,12,998.03 கோடி வங்கி கடன் இணைப்பு வழங்கி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முன்னாள் முதல்வர் கலைஞர் மகளிர் சமூக, பொருளாதார மேம்பாடு அடைந்திட வேண்டும் என்ற உன்னத தொலைநோக்கு பார்வையுடன், முதன்முறையாக 1989ம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் சுய உதவிக் குழு இயக்கம் தொடங்க வித்திட்டார். தற்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. சுய உதவிக் குழுக்களின் பொருளாதார தேவையை கருத்தில் கொண்டு, அவைகளின் தடையற்ற செயல்பாடுகளுக்காக வங்கி கடன் இணைப்புகள் வழங்கப்படுகின்றன.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற 2021-22ம் நிதி ஆண்டில் 4,08,740 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.21,392.52 கோடி, 2022-23ம் நிதி ஆண்டில் 4,49,209 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25,642.01 கோடி, 2023-24ம் நிதி ஆண்டில் 4,79,350 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.30,074.76 கோடி வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது. 2024-25ம் நிதியாண்டில் 35,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 4,84,659 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.35,189.87 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது.
2025-26ம் ஆண்டிற்கான நிலையறிக்கையில், சுய உதவிக் குழு மகளிருக்கு ரூ.37 ஆயிரம் கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்க, முதல்வர் அறிவித்துள்ளதை தொடர்ந்து, நேற்று வரை 7,917 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.698.87 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் 4 ஆண்டுகளில் 18,29,875 சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 2 கோடியே 37 லட்சத்து 88 ஆயிரத்து 375 சுய உதவிக் குழு மகளிருக்கு ரூ.1,12,998.03 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கி சாதனை படைத்து, சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post 2,37,88,375 சுய உதவிக்குழு மகளிருக்கு ரூ.1,12,998.03 கோடி வங்கி கடன் இணைப்பு: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சாதனை appeared first on Dinakaran.