மும்பை: 2024ம் ஆண்டிற்கான பிசிசிஐ விருது வழங்கும் விழா மும்பையில் நடைபெற்றது. இதில், ஐசிசி தலைவர் ஜெய் ஷா, கேப்டன் ரோகித் சர்மா, தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில், சச்சின் டெண்டுல்கருக்கு கர்னல் சிகே நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. கிரிக்கெட்டில் 24 ஆண்டு சாதனைகளை பாராட்டி அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான மதிப்புமிக்க பாலி உம்ரிகர் விருது ஜஸ்பிரீத் பும்ராவுக்கும், சிறந்த சர்வதேச வீராங்கனை மற்றும் ஒருநாள் போட்டிகள் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை என 2 விருதுகள் ஸ்மிருதி மந்தனாவுக்கும் வழங்கப்பட்டன.
அஸ்வினுக்கு பிசிசிஐயின் சிறப்பு விருது வழங்கப்பட்டது. சிறந்த சர்வதேச அறிமுக வீரர் விருது சர்ஃபராஸ் கானுக்கும். பெண்கள் பிரிவில், ஆஷா சோபனாவுக்கும் வழங்கப்பட்டது. விருது பெற்ற சச்சின் டெண்டுல்கர் பேசுகையில், “விருது பெற்றவர்களின் பட்டியலில் எனது பெயர் இடம்பெற்றதற்கு உண்மையிலேயே நன்றி தெரிவிக்கிறேன். நீங்கள் அனைவரும் வளர்ந்துவரும் கிரிக்கெட் வீரர்கள். உங்களிடம் நல்ல திறமையான கிரிக்கெட் உள்ளது. ஆகையால், நீங்கள் சிறந்ததைக் கொடுத்து, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விளையாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கும் நாட்டின் பெயருக்கும் ஏற்ற வகையில் நடந்துகொள்வதும் முக்கியம்.
1999 உலகக் கோப்பையின் போது, நான் என் தந்தையை இழந்தேன். அவரது இறுதிச் சடங்கிற்காக இந்தியா திரும்பினேன். அது திடீரென்று ஒரே இரவில் என்னை மாற்றியது. அணியில் சேர உலகக் கோப்பையில் விளையாட திரும்பினேன். அதன் பிறகு வாழ்க்கை மாறியது. என் அப்பா அருகில் இருக்க வேண்டும், என் வாழ்க்கையில் நடக்கவிருக்கும் பல விஷயங்களைப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அதனால் என் வாழ்க்கையில் எந்த நல்லது நடந்தாலும் அதை முதலில் என் தந்தையிடம் (வானத்தை நோக்கி) காட்டிவிட்டு அனைவருடனும் கொண்டாடுவேன்’’ என்றார்.
The post 1999 உலகக் கோப்பையின் போது தந்தையின் இறப்பு எனது வாழ்க்கையை மாற்றியது: சாதனையாளர் விருது பெற்ற சச்சின் உருக்கம் appeared first on Dinakaran.