191 நாடுகளில் யோகா

6 hours ago 1

யோகா என்பது 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவில் தோன்றிய பழமையான பயிற்சி முறையாகும். இது உடலையும், மனதையும் ஒருசேர கட்டுப்படுத்த முடியும் என்ற அடிப்படையில் வகுக்கப்பட்டது. யோகக்கலை இந்திய நாகரிகத்தின் சிறப்பம்சமாகும். அதற்கு உதாரணமாக சிந்து சமவெளி நாகரிக அகழ்வாராய்ச்சியில் கிடைத்த சில பொருட்களில், யோகா செய்வது போன்ற காட்சிகள் கிடைத்தன. நமது தெய்வங்களின் தோற்றங்களும் யோக நிலையில் அமர்ந்து இருக்கும் உருவங்கள், வடிவங்களாக காட்சி தருகின்றன. பல ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த யோகா முறைகளை பதஞ்சலி முனிவர் தொகுத்தார் என்று வரலாறு கூறுகிறது. இந்த யோக கலை இந்தியாவில் தோன்றி இப்போது உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.

கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற முதல் ஆண்டில் ஐ.நா. சபையில் பேசினார். அப்போது அவர், ஆண்டுதோறும் ஜூன் 21-ந்தேதியன்று உலக யோகா தினம் என்று கொண்டாடலாம் என்ற கருத்தை ஆலோசனையாக கூறினார். இதனை 175 நாடுகள் உடனடியாக ஏற்றுக்கொண்டு ஆதரவளித்தன. 'இங்குள்ள நாடுகளெல்லாம் ஒன்றாதல் கண்டே' என்று சொல்லும் அளவில் யோகா அனைத்து நாடுகளையும் இணைத்தது. அந்தாண்டு முதல் அதாவது 2015-ம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ந்தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கடந்த வாரம் சனிக்கிழமையன்று இந்தியாவில் அனைத்து இடங்களிலும் 'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்' என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்பட்ட யோகா தினம் பல சிறப்புகளைக் கொண்டதாக இருந்தது. இதேபோல 191 நாடுகளில் யோகா தின நிகழ்ச்சிகள் அரங்கேறின.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 26 கிலோ மீட்டர் நீளமான சாலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 3 லட்சத்து 3 ஆயிரம் பேர் பங்கேற்று பல யோகாசன பயிற்சிகளை செய்தனர். பிரதமர் செய்த பல்வேறு யோகாசன பயிற்சிகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. உடலை வில்லாக வளைத்து அவர் செய்துகாட்டிய யோகா பயிற்சிகள் தினமும் அவர் யோகா செய்கிறார் என்பதை பிரதிபலித்தது. ஒரே இடத்தில் அதிகம் பேர் யோகாசன பயிற்சி செய்த வகையில் இது கின்னஸ் சாதனை படைத்தது. இதுபோல ஆந்திர பல்கலைக்கழகத்தில் பழங்குடியின மாணவர்கள் 22 ஆயிரம் பேர் ஒரே இடத்தில் 108 நிமிடங்களில் 108 முறை சூரிய நமஸ்கார பயிற்சியை மேற்கொண்டது கின்னஸ் சாதனை படைத்தது. தமிழ்நாட்டிலும் மதுரையில் நடந்த யோகா நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி யோகா செய்தது மட்டுமல்லாமல் 51 தண்டால்களை இடைவிடாமல் எடுத்தார்.

சென்னையில் சித்தா மருத்துவக்கல்லூரியில் நடந்த யோகா நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலையையும், தோளையும் மட்டும் தரையில் வைத்து உடல் முழுவதும் கால் வரையில் உயரே தூக்கி செய்த சர்வாங்காசனம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. தினத்தந்தி, டிடி நெக்ஸ்ட் பத்திரிகைகள் சார்பில் தினத்தந்தி பதிப்புகள் இருக்கும் அனைத்து நகரங்களிலும் யோகா தின நிகழ்ச்சி நடத்தப்பட்டது. திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் 91 வயதான அருணாசலம் என்பவர் யோகாவின் அனைத்து ஆசனங்களையும் செய்துகாட்டினார். 12 வயது முதல் யோகா செய்து வருவதாக அவர் கூறினார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நடத்திய ஆய்வில் யோகாவின் மருத்துவ பலன்கள் குறித்து அறிவியல் பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவிக்க வேண்டும். பள்ளிக்கூடங்களில் யோகா பயிற்சி அளிக்க வேண்டும்.

Read Entire Article