
சென்னை,
சேலம் மேற்கு தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் நெஞ்சுவலி காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதன்பின்னர் அவர் உடல்நலம் தேறி உள்ளார் என தகவல் வெளியானது. சபநாயகர் அப்பாவுவை சந்திக்க சென்னை வந்த நிலையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணி ராமதாசுக்கும் இடையே சில வாரங்களாக கருத்து மோதல் நடந்து வந்தது. இந்நிலையில், சேலத்தில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற இருந்த நிலையில், அதற்கு முந்தின நாள் எம்.எல்.ஏ அருளுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சூழலில், பா.ம.க. எம்.எல்.ஏ. அருளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அப்போது, அவர் உடல்நலம் பெற்று திரும்ப கூட்டுப்பிரார்த்தனை செய்தேன் என அன்புமணி ராமதாஸ் கூறினார். இதுபற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசிய எம்.எல்.ஏ. அருள், நான் என்ன இறந்து போய் விட்டேனா, என்ன? கூட்டுப்பிரார்த்தனை செய்வதற்கு? இறந்து போனால்தான் கூட்டுப்பிரார்த்தனை செய்வார்கள் என்று ஆவேசப்பட்டார்.
இந்த சூழலில், பா.ம.க. இணை பொது செயலாளராக எம்.எல்.ஏ. அருளுக்கு பதவி அளிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறும்போது, அருளுக்கு இமயமலை உயரத்திற்கு பொறுப்பு கொடுத்திருக்கிறோம். அருள் எப்போதும் என்னுடன்தான் இருப்பார் என கூறியுள்ளார்.