சென்னை: சென்னை காவல் ஆணையாளர் அருண் உத்தரவின் பேரில், கூடுதல் காவல் ஆணையாளர் விஜயேந்திர பிதாரி, மேற்பார்வையில் காவல் கரங்கள் உதவி மையம் மூலம் இதுவரை 8,233 வீடற்ற, ஆதரவற்ற நிலையில் உள்ள மக்கள் மீட்கப்பட்டுள்ளனர், கடந்த 30ம் தேதி சுமார் 40 வயது மதிக்கதக்க பெண் ரீட்டா சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் மெரினா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தலையில் அரிப்பு நோயால் ஏற்பட்ட காயத்துடன் சென்னை மெரினா கடற்கரை ‘நம்ம சென்னை‘ பின்புறம் உள்ள சர்வீஸ் ரோடு பகுதியில் ஆதரவின்றி படுத்திருந்ததார்.
அவரை காவல் கரங்கள் தன்னார்வலர் குழு உதவியுடன் மீட்டு அவருக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் முதலுதவி சிகிச்சை அளித்து முறைப்படி காப்பகத்தில் தங்க வைத்து பராமரிக்கப்பட்டு வந்தார். மீட்கப்பட்ட பெண்ணின் வீடியோவை போலீசார் சமூக வலைத்தளம் மூலம் பகிர்ந்தனர். இந்நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் மகள் தேவதர்சினி (22) வீடியோவை பார்த்து காவல் கரங்கள் தன்னார்வலரிடம் தொடர்பு கொண்டார்.
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட மீட்கப்பட்ட பெண் தனது அம்மா என்றும், தான் தென்காசி மாவட்டம், எஸ்பிஎம் தெரு, கலிங்கப்பட்டியை சேர்ந்தவர் என்றும் தனக்கு ஜோஸ்வா என்ற தம்பி உள்ளதாகவும் தெரிவித்தார். தனது தந்தை ராஜ்குமார் 16 வருடங்களுக்கு முன்பு அம்மாவை விட்டு பிரிந்து சென்றதால் அம்மாவிற்கு மனநிலை பாதிக்கப்பட்டு பெங்களுருவில் உள்ள காப்பகத்தில் பாராமரிக்கப்பட்டு வந்தார்.
கடந்த ஜனவரி மாதம் 2ம் தேதி காப்பகத்திலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்றும் போலீசாரின் விசாரணையின் போது அவர் தெரிவித்தார். இதனையடுத்து காவல் கரங்கள் மூலம் மீட்கப்பட்ட ரீட்டாவை நேற்று முன் தினம் அவரது மகள் மற்றும் உறவினர்களை சென்னைக்கு வரவழைத்து மீண்டும் அவரது குடும்பத்துடன் சேர்த்து வைத்தனர். அம்மா திரும்ப கிடைக்க உதவிய சென்னை காவல் கரங்கள் குழுவினருக்கு மகள் தேவதர்சினி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
The post 16 வருடங்களாக குடும்பத்தை பிரிந்து மெரினா பகுதியில் சுற்றித்திரிந்த பெண் மகளுடன் சேர்த்து வைக்கப்பட்டார்: காவல் கரங்கள் மூலம் மீட்பு appeared first on Dinakaran.