
நெல்லை,
நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அருகே பழவூரை அடுத்த மாடன்பிள்ளைதர்மம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கதுரை மகள் கயல்விழி (வயது 28). இவருக்கு திருமணமான 2 ஆண்டுகளில் கணவரை பிரிந்து பெற்றோரின் வீட்டில் வாழ்ந்து வந்தார். கடந்த 5.10.2024 அன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற கயல்விழி பின்னர் மாயமானார். இதுகுறித்த புகாரின்பேரில், பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
8 மாதங்களாக துப்பு துலங்காத இந்த வழக்கில், தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், கயல்விழியை மீண்டும் கணவருடன் சேர்த்து வைக்க மாந்திரீக பூஜை செய்வதாக கூறி, கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தைச் சேர்ந்த சாமியார் சிவசாமி (50) பலமுறை பணம் வாங்கினார். இவ்வாறு அவர் மொத்தம் ரூ.5 லட்சத்தை கயல்விழியிடம் வாங்கினார்.
ஆனாலும் அவர் கணவருடன் சேர்ந்து வாழாததால் தனது பணத்தை திருப்பி தருமாறு அடிக்கடி சிவசாமியிடம் கேட்டு வந்தார். எனவே கயல்விழியைக் கொலை செய்து நகைகளை அபகரிக்க சிவசாமி திட்டம் தீட்டினார். அதன்படி கயல்விழிக்கு பணத்தை திருப்பி தருவதாக கூறி வரவழைத்த சிவசாமி உள்ளிட்டவர்கள், அவரை காரில் அழைத்து சென்றனர். பின்னர் கயல்விழியின் கழுத்தை நெரித்துக்கொலை செய்து, அவர் அணிந்திருந்த 7 பவுன் நகைகளை பறித்து விட்டு, அவரது உடலை சேரன்மாதேவி அருகே கங்கணாங்குளம் 80 அடி கால்வாயில் வீசிச் சென்றனர்.
இதுதொடர்பாக சிவசாமி, அவருடைய சகோதரி மகனான தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த மாயாண்டி ராஜா (24), வீரவநல்லூரைச் சேர்ந்த பலவேசம் மகன் கண்ணன் (36), கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தைச் சேர்ந்த ஜார்ஜ் மனைவி சிவனேஷ்வரி (32) ஆகிய 4 பேரை கைது செய்தனர். கைதான 4 பேரையும் போலீசார் வள்ளியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் சிவசாமி, மாயாண்டி ராஜா, கண்ணன் ஆகிய 3 பேரையும் பாளையங்கோட்டை மத்திய சிறையிலும், சிவனேஷ்வரியை கொக்கிரகுளம் மகளிர் சிறையிலும் அடைத்தனர்.
இதற்கிடையே கங்கணாங்குளம் 80 அடி கால்வாயில் வீசப்பட்ட கயல்விழியின் எலும்புக்கூடு மற்றும் ஆடைகள் கண்டெடுக்கப்பட்டன. அவை கயல்விழியின் உடல்பாகங்கள் என்பதை உறுதி செய்வதற்காக டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் கயல்விழியின் பெற்றோர், உறவினர்களிடம் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பவும் ஏற்பாடு செய்துள்ளனர்.