புதுடெல்லி: 10 மசோதாவிற்கு அனுமதியளித்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த 2 பாஜக எம்பிக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய ஜேபி நட்டா, இந்த கருத்துகளை அவர்களின் தனிப்பட்ட கருத்து என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், 10 மசோதாக்களுக்கும் அனுமதி அளித்ததுடன், மசோதாக்களுக்கு அனுமதி அளிக்க காலக்கெடு நிர்ணயித்தது. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தாலும் கூட அந்த மசோதாக்களை 3 மாதத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் இதை விமர்சித்து பேசினார். இப்போது பாஜக எம்பி நிஷிகாந்த் துபேயும் இதுபற்றி சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ‘உச்ச நீதிமன்றம் சட்டங்களை இயற்ற வேண்டுமானால், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளை மூடிவிடலாம். உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு வழிகாட்டுதல்களை வழங்குவதன் மூலம் நாடாளுமன்றத்தின் சட்டமன்ற அதிகாரங்களை நீதிமன்றம் தனக்குத்தானே பறித்துக்கொண்டுள்ளது. சட்டம் இயற்றுவது நாடாளுமன்றத்தின் வேலை. நீதிமன்றத்தால் அரசுக்கு உத்தரவிட முடியும். ஆனால் நாடாளுமன்றத்திற்கு அல்ல’ என்று கூறியுள்ளார்.
அதேபோல் பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினரான தினேஷ் சர்மா கூறுகையில், ‘இந்திய அரசியலமைப்பின்படி, ஜனாதிபதி உயர் அதிகாரம் பெற்றவர்; ஜனாதிபதியை எவரும் சவால் செய்ய முடியாது. மக்களவை, மாநிலங்களவை மற்றும் ஜனாதிபதி ஒப்புதல் அளித்த பின்னர், உச்சநீதிமன்றம் அதற்கு உத்தரவிட முடியாது. அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பில் நீதித்துறை மற்றும் சட்டமன்றத்தின் உரிமைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றத்தின் சில நடவடிக்கைகள் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன’ என்று குறிப்பிட்டார். மேற்கண்ட இரு பாஜக எம்பிக்களின் கருத்துகள் உச்ச நீதிமன்றத்தை கடுமையாக விமர்சிக்கும் வகையில் உள்ளதால், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பாஜக தலைவர்களை விமர்சித்து வருகின்றன.
இதுகுறித்து பாஜக தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்ட பதிவில், ‘நீதித்துறை மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குறித்து பாஜக எம்பிக்கள் நிஷிகாந்த் துபே, தினேஷ் சர்மா ஆகியோர் தெரிவித்த கருத்துகளுக்கும், பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவை அவர்களின் தனிப்பட்ட கருத்துகள் மட்டுமே. ஆனால், இத்தகைய கருத்துகளை பாஜக ஆதரிக்கவில்லை. பாஜக இந்த கருத்துகளை நிராகரிக்கிறது. பாஜக நீதித்துறையை மதிக்கிறது; அதன் உத்தரவுகளையும் ஆலோசனைகளையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறது. ஏனெனில், நாட்டின் அனைத்து நீதிமன்றங்களும் அரசியலமைப்பைப் பாதுகாக்கும் வலுவான தூண்கள் என்று நம்புகிறோம். எனவே சர்ச்சைக்குரிய கருத்துகளை தவிர்க்குமாறு பாஜக எம்பிக்கள் இருவர் மட்டுமின்றி மற்றவர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
The post 10 மசோதாவிற்கு அனுமதியளித்த விவகாரம்; சுப்ரீம் கோர்ட் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த 2 பாஜக எம்பிக்கள்: தனிப்பட்ட கருத்து என்று ஜே.பி நட்டா மழுப்பல் appeared first on Dinakaran.