
சேலம்,
8 அணிகள் இடையிலான 9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் நடந்து முடிந்தன.
இந்நிலையில், தொடரின் 2வது கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தில் நடந்து வருகிறது. இதில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. அதன்படி மாலை 3.15 மணிக்கு தொடங்கும் 10-வது லீக்கில் முன்னாள் சாம்பியனான பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்சை எதிர்கொள்கிறது.
தனது முதல் இரு ஆட்டங்களில் திருப்பூர், நெல்லை ராயல் கிங்சை வீழ்த்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 'ஹாட்ரிக்' வெற்றிக்கு குறி வைத்துள்ளது. அதே சமயம் திண்டுக்கல், மதுரையிடம் தோல்வியை தழுவிய கோவை கிங்ஸ் அணி சரிவில் இருந்து மீண்டு வெற்றிக் கணக்கை தொடங்க போராடும். வலுவான அணிகள் மல்லுக்கட்டுவதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
இதே மைதானத்தில் இரவு 7.15 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, மதுரை பாந்தர்சை சந்திக்கிறது.