
காசா,
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பிணைக் கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றனர்.
இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பிணைக் கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது. பிணைக் கைதிகளில் சிலர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
ஹமாஸ் அமைப்பினரால் கடத்திச் செல்லப்பட்ட ஜூடி வெயின்ஸ்டின் ஹகாய்(வயது 70) மற்றும் அவரது கணவர் காடி ஹகாய்(வயது 72) ஆகிய இருவரின் உடல்கள் கடந்த 5-ந்தேதி கான் யூனிஸ் பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. இந்த நிலையில், மேலும் ஒரு பிணைக் கைதியின் உடல் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.
தாய்லாந்து நாட்டை சேர்ந்த நட்டாபாங் பின்ட்டா என்பவர் ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதியாக பிடித்துச் செல்லப்பட்டவர் ஆவார். அவரை ஹமாஸ் அமைப்பினர் கொலை செய்துள்ளனர் என்றும், அவரது உடல் ரபா பகுதியில் கண்டெக்கப்பட்டு இஸ்ரேலுக்கு கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, ஹமாஸ் ஆயுதக்குழுவின் பிடியில் இன்னும் 55 பேர் பிணைக் கைதிகளாக உள்ளனர். இதில் சுமார் 20 பேர் உயிருடன் இருக்க வாய்ப்புள்ளது என இஸ்ரேல் தரப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.