
மும்பை,
மும்பையில் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் ரெஸ்டாரண்ட் நடத்தி வருகின்றனர். கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து அந்தேரி பகுதியில் நடிகர் ஒருவரின் பங்களாவை வாடகைக்கு எடுத்து ரெஸ்டாரண்ட் நடத்தி வருகிறார். இதே போன்று ஷில்பா ஷெட்டி, ஷாருக்கான் மனைவி கெளரி கான், நடிகர் பாபிதியோல் ஆகியோரும் ரெஸ்டாரண்ட் நடத்தி வருகின்றனர். ரெஸ்டாரண்ட்களில் உணவின் தரம் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள யூடியூப்பர் சர்தக் சச்சிதேவ் ஒவ்வொரு ரெஸ்டாரண்ட்டிற்கும் சென்று சாப்பிட்டு சோதனை செய்து வருகிறார்.
மும்பை பாந்த்ராவில் உள்ள ஷாருக்கான் மனைவி கவுரி கான் நடத்தும் டோரி என்ற உணவகத்திற்கு சச்சிதேவ் சென்று அங்குள்ள உணவுகளை சாப்பிட்டு ஆய்வு செய்தார். அதோடு அந்த உணவகத்தில் விநியோகம் செய்யப்பட்ட பனீர் தரமானதாக கலப்படம் இல்லாததாக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள அயோடின் சோதனையை நடத்திப்பார்த்தார். அயோடின் சோதனையில் கெளரி கான் நடத்தும் உணவகத்தில் சப்ளை செய்யப்பட்ட பனீர் தோல்வி அடைந்துவிட்டது. அயோடின் சோதனையில் கலப்படம் இல்லாத பனீர் கலர் மாறாமல் இருக்கவேண்டும். ஆனால் கெளரி கான் உணவகத்தில் பரிமாறப்பட்ட பனீர் மீது அயோடினை ஊற்றியபோது கருப்பு மற்றும் ஊதா கலருக்கு மாறியது. உடனே ஷாருக்கான் உணவகத்தில் கலப்பட பனீர் பயன்படுத்தப்படுவதாக சச்சிதேவ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். பனீர் கருப்பு கலரில் மாறியதன் மூலம் அதில் ஸ்டார்ச் கலந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மற்ற நட்சத்திரங்களின் உணவகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் இது போன்ற மாற்றம் ஏற்பட்டதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து ஷாருக்கான் மனைவியின் உணவகம் சார்பாக வெளியிடப்பட்ட விளக்கத்தில், "அயோடின் சோதனை பனீர் தரத்தை நிர்ணயிப்பதாக இருக்காது. சோயா கலந்த பனீர் சப்ளை செய்யப்பட்டதால் அதன் பிரதிபலிப்பாக பனீர் கருப்பு கலராக மாறியிருக்கலாம். நாங்கள் சுத்தமான பனீரையே பயன்படுத்துகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.