அதிமுக முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி திமுக-வில் இணையப் போகிறார் என்று வதந்திகள் வட்டமடித்த நிலையில், அவரை கட்சியின் அமைப்புச் செயலாளராக்கி இருக்கிறார் பழனிசாமி. இவரோடு சேர்ந்து, முன்னாள் எம்எல்ஏ - வான ஆர்.சின்னசாமியும் அமைப்புச் செயலாள ராக்கப்பட்டிருக்கிறார். இப்படி ஒரே மாவட்டத்தில் இருவருக்கு திடீரென அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது பல்வேறு யூகங்களைக் கிளப்பி விட்டிருக்கிறது.
அதிமுக கோட்டை எனச் சொல்லப்படும் கோவை மாவட்டத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பவர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. தலைமை நிலையச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வரும் இவர், டெல்லி வரைக்கும் தனது நட்பு வளையத்தை விரித்து வைத்திருக்கிறார். பாஜக-வுடன் கூட்டணியைத் தொடர வேண்டும் என்ற மனநிலையில் இருக்கும் வேலுமணி, பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதிலும் கூடுதல் ஆர்வத்துடன் இருப்பவர்.