போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்தியப் பிரதேசத்தின் ஜபுவா மாவட்டத்தில், மேக்நகர் பகுதியில் உள்ள சஞ்சேலி ரயில்வே கிராசிங் அருகே, இன்று அதிகாலை 2:30 மணியளவில் ராஜஸ்தானில் இருந்து சிமெண்ட் லோடு ஏற்றி வந்த லாரி, திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு சிவ்கர், தேவ்கர் கிராமங்களுக்கு திரும்பிக் கொண்டிருந்த வேனின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வேனில் பயணித்த 11 பேரில் 9 பேர் உயிரிழந்தனர். இதில் 4 குழந்தைகள், 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் அடங்குவர். மற்ற இருவர் படுகாயமடைந்து தாண்டலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்த இடம் தற்காலிக, குறுகிய பாதையாக இருந்ததால், லாரிதனது கட்டுப்பாட்டை இழந்து வேனின் மீது விழுந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று காவல் கண்காணிப்பாளர் பத்மவிலோசன் ஷுக்லா உறுதிப்படுத்தினார். லாரி ஓட்டுநர் தப்பியோடிய நிலையில், அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த துயர சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
The post வேன் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி appeared first on Dinakaran.