கோவை,
கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பூண்டி அடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவில் அடிவாரத்தில் இருந்து சுமார் 6 ஆயிரம் அடி உயரத்தில் 7-வது மலையில் சுயம்பு லிங்கமாக வெள்ளியங்கிரி ஆண்டவர் அருள்பாலிக்கிறார். அவரை தரிசனம் செய்ய தமிழகம் மட்டு மின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.
வெள்ளியங்கிரி மலையேற ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டு நேற்று முதல் மே மாதம் 31-ந் தேதி வரை வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்து உள்ளது. இதையொட்டி மலையேறும் பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.
அதன்படி 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், குழந்தைகள், உயர் ரத்த அழுத்தம், இதயம், நுரையீரல் பாதிப்பு, சிறுநீரக கோளாறு, சர்க்கரை நோய், ரத்த சோகை உள்ளவர்கள் மலையேற்ற பயணத்தின் போது கவனத்துடன் இருக்க வேண்டும். பக்தர்கள் தனியாக செல்லாமல் குழுவாக செல்ல வேண்டும். குடிநீர், உணவு, மருந்துபோன்ற அத்தியாவசிய பொருட்களை எடுத்து வர வேண்டும். மலையேற்ற பகுதிகளில் கடும் குளிர் நிலவுவதால் தேவையான பாதுகாப்பு உடைகளை எடுத்து வர வேண்டும். அடிவாரத்தில் உள்ள முகாமில் மருத்துவ பரிசோதனை செய்த பிறகு மலையேற வேண்டும்.
மலையேற்றத்தின் போது தலைவலி, நெஞ்சுவலி, தலைசுற்றுதல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டால் பயணத்தை தொடராமல் உடனடியாக மருத்துவக் குழுவினரை அணுக வேண்டும். மலையேறும் பக்தர்கள், வனப் பகுதியின் சுற்றுச்சூழலை கெடுக்கும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொண்டு செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.