வெளியே புறப்பட்டால் செல்போனை சார்ஜ் செய்துவிட்டு புறப்படுவதுபோல துணிப்பை, தண்ணீர் பாட்டில் இல்லாமல் வீட்டைவிட்டு வெளியே புறப்பட வேண்டாம்: உலக சுற்றுச்சூழல் தினத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

2 days ago 3

சென்னை: வெளியே புறப்பட்டால், செல்போனை சார்ஜ் செய்துவிட்டுதான் எல்லோரும் புறப்படுகிறோம். அதுபோல, மறக்காமல் துணிப்பை மற்றும் தண்ணீர் பாட்டில் இல்லாமல், வீட்டை விட்டு வெளியே புறப்படமாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் நேற்று நடந்த உலக சுற்றுச்சூழல் தின விழாவில், சென்னை கிண்டியில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி, தமிழ்நாடு கடல்சார் மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக ரூ.1.75 கோடி செலவில் 14 கடலோர மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள கைவிடப்பட்ட மீன்பிடி வலைகள் சேகரிப்பு மையங்களை திறந்து வைத்து, தனுஷ்கோடியில் பெரும் பூநாரை பறவைகள் சரணாலயம் அறிவிக்கை பற்றிய குறும்படத்தையும் பார்வையிட்டார். மேலும், 1400 வனக் காவலர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கி, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட ஆட்சி தலைவர்கள், வனக் காவலர்கள், நீர் நிலைப்பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட தன்னார்வலர்கள் ஆகியோருக்கு விருதுகளை வழங்கினார்.

அப்போது, அவர் பேசியதாவது: இந்தியாவிலேயே சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக வேறு எந்த மாநிலத்திலும் ‘இத்தனை இயக்கங்கள், திட்டங்கள் இல்லை’ என்று அடித்து சொல்கிறேன். அந்த அளவுக்கு கடந்த 4 ஆண்டுகளில் தொலைநோக்கோடு பல முன்னெடுப்புகளை செயல்படுத்திக்கொண்டு வருகிறோம். தமிழ்நாடு க்ரீன் கிளைமேட் கம்பெனி என்கின்ற, இந்தியாவின் மிகச்சிறந்த ஒருங்கிணைந்த காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் ஆளுகை கட்டமைப்பை உருவாக்கினோம். அதன் கீழ், நான்கு முதன்மை இயக்கங்களை அமைத்திருக்கிறோம்.

அதிகம் அறியப்படாத மற்றும் அருகி வரக்கூடிய உயிரினங்களை, ‘தமிழ்நாடு அருகிவரும் உயிரினங்கள் நிதியத்தின்’ மூலம் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறோம். தொடக்கத்திலேயே நாம் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடியை பற்றி சொன்னேன். அரசாங்கம் செயல்படுத்துகின்ற திட்டங்களால் மட்டும் இந்த நெருக்கடியை தீர்த்துவிட முடியாது. ஊர் கூடித்தான் தேர் இழுக்க வேண்டும். நம்முடைய கனவு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மட்டும் கிடையாது – அது ஒரு பசுமை பொருளாதாரமாக இருக்க வேண்டும் என்பதுதான். இந்த ஆண்டில் இருந்து, நம்முடைய தனித்துவமான உயிரினங்களின் ஆராய்ச்சி, கல்வி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த தொடர்ச்சியாக புதிய பாதுகாப்பு மையங்கள் நிறுவப்படும்.

2021ம் ஆண்டு, பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிர்த்து போராட ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டத்தை தொடங்கினோம். இது அரசின் திட்டமாக இருந்தால் போதாது. மக்கள் இயக்கமாக மாறவேண்டும். அரசாங்கம் திட்டங்களை கொண்டுவர தான் முடியும். அதன் வெற்றி மக்கள் தங்களின் அன்றாட பழக்கங்களை மாற்றிக்கொள்வதில்தான் இருக்கிறது. தொடக்கத்தில் கஷ்டமாகதான் இருக்கும். ஆனால், வேறு வழி இல்லை. இந்த ஆண்டு சுற்றுச்சூழல் நாளின் ‘தீம்’ – ‘நெகிழி மாசுபாட்டை ஒழிப்போம்’ என்பதுதான். இன்றைக்கு பிளாஸ்டிக் மாசுபாடு நம்முடைய பூமியை மூச்சுத்திணற வைத்துக்கொண்டு இருக்கிறது.

வெளியே புறப்பட்டால், செல்போனை சார்ஜ் செய்துவிட்டுதான் எல்லோரும் புறப்படுகிறோம். அதுபோல, மறக்காமல் துணிப்பை மற்றும் தண்ணீர் பாட்டில் இல்லாமல், வீட்டை விட்டு வெளியே புறப்படமாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்வோம். இந்த சிறிய செயல் நம்முடைய கூட்டுமுயற்சிக்கு ஒரு தொடக்கமாக இருக்கட்டும். இன்றைய நாள், கடல் மாசுபாட்டை எதிர்த்து போராடுவதற்கான பரப்புரையை விரிவுபடுத்துகிறோம். மேலும், தமிழ்நாட்டின் 14 கடலோர மாவட்டங்களிலும் ‘கைவிடப்பட்ட’ மீன் வலைகளை அகற்றும் முயற்சியும் தொடங்கப்படுகிறது. ‘தூய்மை மிஷன் – இது குப்பை மேட்டர் இல்லை’ என்று ஒரு இயக்கத்தை தொடங்கப் போகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

* அமெரிக்கா, ஜப்பான் போன்று ஆக வேண்டும்
நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘இந்தியா ஏன் அமெரிக்கா போன்று இல்லை, ஜப்பான் போன்று இல்லை, ஐரோப்பா போன்று இல்லை என்று நிறைய சினிமாவில் கேள்வி கேட்பார்கள். அதுபோன்று ஆகவேண்டும் என்றால், அந்த மக்களுக்கு இருக்கக்கூடிய சுய ஒழுக்கம் நமக்கும் இருக்க வேண்டாமா? அதற்கான முதல்படிதான் குப்பையை தரம் பிரித்து போடுவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற இந்த தூய்மை மிஷன். சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக அரசு அறிவிக்கின்ற, அறிமுகப்படுத்தும் திட்டங்களை உங்கள் சொந்த திட்டமாக நினைத்து நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும். நம்முடைய அரசை பொறுத்தவரை தீர்வுக்காக காத்திருப்பவர்கள் இல்லை, தீர்வை உருவாக்குகின்றவர்கள். இன்னும் ஒருபடி மேலே சென்று சொல்ல வேண்டும் என்றால், நாம் தான் தீர்வு. நம்முடைய திராவிட மாடல் அரசு, சமூக நீதிக்கான அரசு மட்டுமல்ல, சூழலியல் நீதிக்கான அரசாகவும் இருக்கும். அதற்கு மக்களாகிய நீங்கள் துணை நிற்க வேண்டும்’ என்றார்.

* ‘இயற்கையை பாதுகாக்க உறுதி ஏற்போம்’
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ‘நம் சொகுசுக்காக இயற்கையை மாசுபடுத்தாமல், நம்மை வாழ வைக்கும் இயற்கையைப் பாதுகாக்க உறுதியேற்றிடுவோம்!’ என்று கூறி உள்ளார்.

The post வெளியே புறப்பட்டால் செல்போனை சார்ஜ் செய்துவிட்டு புறப்படுவதுபோல துணிப்பை, தண்ணீர் பாட்டில் இல்லாமல் வீட்டைவிட்டு வெளியே புறப்பட வேண்டாம்: உலக சுற்றுச்சூழல் தினத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Read Entire Article