
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில் வெற்றிமாறன் தொடர்ந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அறம் பட இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள 'மனுசி' படத்தை வெற்றிமாறன் தயாரித்துள்ளார். பயங்கரவாதி என்ற சந்தேகத்தில் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவது குறித்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் மாநில அரசை மோசமாக சித்தரித்து உள்ளதாகவும், கம்யூனிச கொள்கையை குழப்பும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி தணிக்கை சான்று வழங்க சென்சார் போர்டு மறுத்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வெற்றிமாறன் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், தணிக்கை சான்று மறுத்து உத்தரவு பிறப்பிக்கும் முன், தணிக்கை வாரியம் தன் தரப்பில் விளக்கமளிக்க அவகாசம் வழங்கவில்லை எனவும், பேச்சு சுதந்திர வரம்புக்குள் வராத காட்சிகளை எடிட் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுஷி படத்தில் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் எவை? எனவும் ஆட்சேபனைக்குரிய காட்சிகள், வசனங்களை தெரிவிக்காவிட்டால் எப்படி எடிட் செய்ய முடியும்? எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதி சென்சார் போர்டு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.