புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் வெற்றியையும், பிரதமர் மோடியின் 3வது கால பதவியின் முதல் ஆண்டு நிறைவு விழாவையும் கொண்டாடும் வகையில் வீடு வீடாக பா.ஜவினர் குங்குமம் விநியோகம் செய்ய உள்ளதாக தகவல் பரவியது. இதுபற்றி அறிந்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள், ஒவ்வொரு பெண்ணுக்கும் மரியாதை உண்டு, அவர்கள் தங்கள் கணவரிடமிருந்து மட்டுமே குங்குமத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். ஏன் முதலில் உங்கள் திருமதிக்கு குங்குமம் கொடுக்கவில்லை?.
உங்களின் குடும்ப விவரங்களுக்குள் நுழைய விரும்பவில்லை. ஆனால் அவ்வாறு செய்ய வேண்டிய கட்டாயம் உங்களால் தான் ஏற்பட்டது. பல்வேறு மாநிலங்களில் வரவிருக்கும் தேர்தல்களுக்கு முன்னதாக, அரசியல் ஆதாயங்களுக்காக ஒன்றிய அரசு இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரிட்டது. முதலில், அவர் (மோடி) தன்னை ஒரு தேநீர் விற்பனையாளர், பின்னர் ஒரு காவலாளி என்று அழைத்துக் கொண்டார், இப்போது அவர் குங்குமம் விற்க வந்துள்ளார். அவர் இப்படி இங்கு குங்குமம் விற்க முடியாது’ என்று விமர்சனம் செய்தார்.
* மோடியை இப்படியா பேசுவது?
பிரதமர் மோடியை குறிவைத்து மம்தா பேசியதை பா.ஜ கண்டித்துள்ளது. இதுதொடர்பாக பாஜ தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா,’பிரதமர் மோடி பற்றி ஒருபோதும் பேசக்கூடாததை மம்தா பானர்ஜி கூறியுள்ளார். எந்த அரசியல்வாதியோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியோ இதுபோன்ற ஒரு மொழியைப் பயன்படுத்தியது இல்லை. ஆனால் மம்தா பேசிவிட்டார். மோடி அனைவருக்கும் ஒரு சேவகர். அவர் சிலருக்கு தந்தை போன்றவர், மற்றவர்களுக்கு ஒரு சகோதரர் போன்றவர்.மோடி அரசாங்கத்தின் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஆளும் பாஜ பெண்களுக்கு குங்குமம் விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தி போலியானது’ என்றார்.
* எதிர்வினை வந்துவிட்டதால் போலி செய்தி என்கிறார்கள்
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் கூறுகையில்,’ வீடு வீடாக குங்குமம் கொடுப்பது தொடர்பாக வந்த எதிர்விளைவு காரணமாக பாஜ தனது பிரச்சாரத்தை வாபஸ் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இப்போது அவர்கள் கொண்டு வர இருந்த அந்த மலிவான திட்டத்தை போலி செய்தி என்று அழைக்கிறார்கள்’ என்றார்.
The post வீடு வீடாக குங்குமம் வழங்க திட்டமா? மோடி ஏன் அவரது மனைவிக்கு குங்குமம் கொடுக்கவில்லை?மம்தா அதிரடி கேள்வி appeared first on Dinakaran.