
புதுடெல்லி,
மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கார் கலந்து கொண்டார். அவர் மாணவர்களிடையே பேசும்போது, விவசாயிகளின் வலியை பற்றி பேசுவது அல்லது அவர்களுடைய வாழ்க்கை மேம்பாட்டுக்கான வழிகளை பற்றி பேசுவது என்பது என்னுடைய தலையாய கடமையாகும்.
அவர்களுடைய கவலைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வது என்பது அவசியம் ஆகும் என்றார். இந்த பேச்சின்போது, விவசாயிகள் வேளாண் தொழில்முனைவோர்களாக உருவாக வேண்டும் என கூறிய தன்கார், அவர்களுடைய உற்பத்தி பொருட்களை விற்க கூடிய மற்றும் அது சார்ந்த வர்த்தகத்திற்கு வரும்போது, விவசாயிகள் லாபத்திற்கான நல்லதொரு பங்கை பெறுவார்கள் என்றார்.
அவர்களுடைய பொருட்களின் மதிப்பை ஏன் அவர்கள் கூட்டுவதில்லை? அதற்கான முன்னெடுப்பு நடவடிக்கையை அவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் பேசியுள்ளார்.
விவசாயிகள் எதிர்கொள்ள கூடிய சிக்கல்களை தீர்ப்பதற்கான பணிகளை செய்ய வேண்டும் என மாணவர்களை அவர் ஊக்கப்படுத்தினார். விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களில் ஒன்றான, வேளாண் உற்பத்தி பொருட்கள் நீண்டகாலம் கெடாமல் இருப்பதற்கான விசயங்களில் மாணவர்கள் தீர்வு காண முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், மத்திய பிரதேச கவர்னர் மங்குபாய் பட்டேல், முதல்-மந்திரி மோகன் யாதவ், மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் பிற உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.