விழிக்குமா பாஜ அரசு

4 hours ago 2

விழுப்புரத்தில் இருந்து நேற்று முன்தினம் மயிலாடுதுறை நோக்கி சென்ற பாசஞ்சர் ரயில், கடலூர் முதுநகர் அருகே செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில், தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் வேன் நொறுங்கி 3 மாணவர்கள் பரிதாபமாக பலியாயினர். சிலர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சையில் உள்ளனர். பொதுவாக, ரயில்வே கேட் பகுதி அருகே குடியிருப்பவர்கள், வாகனங்களில் கடந்து செல்பவர்கள் நாள்தோறும் அனுபவிக்கும் துயரங்கள் சொல்லி மாளாது.

பள்ளி, கல்லூரி செல்பவர்கள், அரசு, தனியார் பணிக்கு செல்பவர்கள், மருத்துவ சிகிச்சை மற்றும் பல்வேறு அவசர வேலைகளுக்காக செல்பவர்கள், ரயில் கடந்து செல்லும் வரை ரயில்வே கேட் பகுதியில் காத்திருக்க வேண்டும். பொறுமையிழந்து சில நேரங்களில் நடந்து செல்பவர்கள், சைக்கிள் உள்ளிட்ட இலகு ரக வாகனங்களில் செல்பவர்கள், அவசரமாக தண்டவாளத்தை கடந்து செல்ல முற்பட்டு விபத்திற்குள்ளாகி இறப்பதும் சர்வசாதாரணமாக நடக்கும்.
கடந்தாண்டு மே மாதம் கோவை போத்தனூரில் இருந்து கேரள மாநிலம், பாலக்காடு நோக்கி சென்ற ரயில் மோதியதில் பெண் யானை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த வழித்தடத்தில் மட்டும் 35க்கும் மேற்பட்ட யானைகள் ரயில் மோதி இறந்தது கவனத்திற்குரியது.

கடலூர் ரயில் சம்பவத்தை பொறுத்தவரை, கேட்கீப்பரான ம.பி மாநிலத்தை சேர்ந்த பங்கஜ் சர்மா, ரயில்வே கேட்டை மூடாமல் தூங்கியதாலேயே விபத்து நிகழ்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. பெரும்பாலும் ரயில்வே கேட்கள் கிராமப்புறங்கள் அல்லது புறநகரை ஒட்டிய பகுதிகளிலேயே அதிகமிருக்கும். இதுபோன்ற இடங்களில் உள்ள கேட் கீப்பர்களில் பலர் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். இவர்களுக்கு பெரிய சவாலே மொழி பிரச்னைதான். ரயில்வே துறையில் இது பெரும் சாபக்கேடு.

தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் தமிழ் மொழி தெரியாதவர்களே முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். இதனால் ஏற்கனவே ஒரு பெரும் அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு, மே மாதம் மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் எதிரெதிரே வந்த சம்பவம் நிகழ்ந்தது. அதிர்ஷ்டவமாக கடைசி நேரத்தில் ரயில்கள் நிறுத்தப்பட்டன. மோதியிருந்தால் பெரும் விபத்து நிகழ்ந்திருக்கும். இதற்கு ரயில்வே அதிகாரிகளிடையே ஏற்பட்ட மொழிக்குழப்பமே முக்கிய காரணமென விசாரணையில் தெரிய வந்தது. இதேபோல் கடந்த ஜூன் மாதம் திண்டுக்கல்லில் இருந்து நாகர்கோவில் சென்ற பயணிகள் ரயில், கடம்பூர் அருகே சிக்னல் கோளாறு காரணமாக நடுவழியில் நிறுத்தப்பட்டது.

அப்போது அதன் பின்னால் வாரணாசி – கன்னியாகுமரி தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்தது. கடைசி நேரத்தில் அதிகாரிகள் கண்டறிந்ததால் அப்போதும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்திய அளவில் கடந்த 5 ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட ரயில் விபத்துகள் நடந்துள்ளன. 350க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ரயில்வே கட்டணத்தை உயர்த்துவதிலும், தேஜாஸ், வந்தேபாரத் என மல்டி கலர் பூசி, மக்களிடம் பணம் பறிப்பதையே குறியாக கொண்ட ஒன்றிய பாஜ அரசு, பெருகி வரும் ரயில் விபத்துகளை தடுப்பதற்கான வழிமுறைகளை கண்டறியவில்லை. இந்தியளவில் முக்கிய, வருவாய் மிக்க, பாதுகாப்பான போக்குவரத்தாகக் கருதப்படும் ரயில்வேயில் சில சீர்திருத்தங்களை இனியாவது ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும்.

The post விழிக்குமா பாஜ அரசு appeared first on Dinakaran.

Read Entire Article