
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள துலுக்கன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மனைவி வெள்ளையம்மாள் (82). இவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவர் மதிய நேரத்தில் தனது வீட்டின் அருகே உள்ள வேப்பமரத்தின் நிழலில் கட்டில் போட்டு தூங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 1ம்தேதி மதியம் மரத்தின் நிழலில் வெள்ளையம்மாள் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் பலத்த காற்று வீசியது. இதனால் மரத்தின் அருகே இருந்த வெள்ளையம்மாளின் வீட்டின் மண் சுவர் திடீரென்று சரிந்து அவர் மீது விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கிய அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
இதை பார்த்து அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக விளாத்திகுளம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, வெள்ளையம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.