
பெங்களூரு,
10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் 57 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக ஒருவார காலத்திற்கு தொடர் நிறுத்திவைக்கப்பட்டது.
தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலைமை சரியானதால் இந்த தொடர் மீண்டும் நாளை தொடங்குகிறது. நடப்பு தொடரில் பெங்களூரு அணியின் கேப்டனாக ரஜத் படிதார் செயல்பட்டு வருகிறார். கடந்த வருடம் கேப்டனாக செயல்பட்டு வந்த டு பிளெஸ்சிஸை ஆர்.சி.பி நிர்வாகம் இந்த வருடம் அணியில் எடுக்கவில்லை.
இதன் காரணமாக நடப்பு ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணியின் கேப்டனாக விராட் செயல்படலாம் என நினைத்த வேளையில் ரஜத் படிதார் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றது குறித்து ரஜத் பட்டிதார் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
விராட் கோலி பெங்களூர் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு வகையான தகட்டை பிடிக்கச் சொன்னபோது, என் மனதில் இது குறித்து அப்போது தோன்றவில்லை வெறுமையாக உணர்ந்தேன். அதை விராட் கோலி என்னிடம் கொடுக்கும் போது, 'கேப்டன் பதவிக்கு நீ தகுதியானவன் அந்த தகுதியை நீ தான் சம்பாதித்தாய்' என்று கூறினார்.
அப்போது அவர் கூறிய பிறகு தான் நான் சாதாரண மன நிலைக்கு வந்தேன். விராட் கோலி வலைகளில் பேட்டிங் செய்யும்போது எல்லாம் அவரது பேட்டிங்கை நான் பார்க்கிறேன். முடிந்தவரை அவரிடம் இருந்து விஷயங்களை கற்றுக் கொள்கிறேன். இது எனக்கு ஒரு நல்ல வாய்ப்பாக உள்ளது.
மேலும், கேப்டன் பதவியும் என்னிடம் இருக்கிறது. விராட் கோலி என்னோடு இருக்கிறார். முடிந்தவரை அவரிடம் இருந்து அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொள்ள முயற்சிப்பேன். அவருக்கு இருக்கும் அனுபவம் மற்றும் யோசனைகளின் அளவு வேறு யாருக்கும் இருப்பதாக தோன்றவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.