விராட் கோலியை விட பாபர் அசாம் பெரிய வீரராக வருவார் - கராச்சி கிங்ஸ் அணி உரிமையாளர்

14 hours ago 1

கராச்சி,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான பாபர் அசாம் சமீப காலமாக பார்மின்றி தவித்து வருகிறார். அறிமுகம் ஆன புதிதில் ஏராளமான சாதனைகள் படைத்த அவர் தற்சமயம் படுமோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். இதன் காரணமாக அவரை பல பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர்.

முன்னதாக பாபர் அசாம் சிறப்பாக விளையாடிய தருணத்தில் அவர் விராட் கோலியை விட சிறந்த வீரர் என்று பல பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பாராட்டினர். அவர்களே தற்போது பாபர் அசாமை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்ற அளவிற்கு விமர்சிக்கின்றனர்.

இத்தகைய சூழலுக்கு மத்தியில் தற்போது பாபர் அசாம் தற்போது பி.எஸ்.எல். தொடரில் பெஷாவர் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இதிலும் 2 போட்டிகளில் விளையாடி வெறும் ஒரு ரன் மட்டுமே அடித்து அணிக்கு பின்னடைவை கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் பாபர் அசாம் மீண்டும் கம்பேக் கொடுக்கும்போது அவர் விராட் கோலியை விட சிறந்த வீரராக வருவார் என்று பி.எஸ்.எல். தொடரில் கராச்சி கிங்ஸ் அணியின் உரிமையாளரான சல்மான் இக்பால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "நான் உங்களுக்குச் சொல்கிறேன். என் வார்த்தைகளை குறித்து வைத்து கொள்ளுங்கள். பாபர் அசாம் மீண்டும் பார்முக்கு திரும்பும்போது, விராட் கோலி உட்பட உலகின் வேறு எந்த வீரரையும் விட அவர் ஒரு பெரிய வீரராக வருவார். அவர் கேரி சோபர்ஸ் மற்றும் சர் விவ் ரிச்சர்ட்ஸ் போன்ற பெயர்களுடன் இணைவார். அவரிடம் அந்த திறமை உள்ளது. அதை நீங்கள் மாற்ற முடியாது. அவர் ஒரு அற்புதமான ஆட்டத்துடன் திரும்பி வருவார்" என்று கூறினார்.

Read Entire Article