வியாபாரி வீட்டில் தங்க நகை திருட்டு காட்பாடியில்

2 months ago 12

வேலூர், டிச.17: காட்பாடியில் வியாபாரி வீட்டில் தங்க நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். காட்பாடி கே.என் தெருவை சேர்ந்தவர் மோகன் (72 ). காய்கறி மொத்த வியாபாரி. இவரது மனைவி மஞ்சுளா. தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவரும் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் காட்பாடியில் உள்ள வீட்டில் மோகன் மற்றும் அவரது மனைவி மஞ்சுளா ஆகியோர் மட்டும் வசித்து வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு மஞ்சுளாவிற்கு இடது முட்டியில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் இருந்து வந்தார். அவருக்கு விருதம்பட்டில் உள்ள ஒரு தனியார் ஹோம் கேரில் இருந்து நர்சு ஒருவர் பராமரிப்பு பணிக்கு தினமும் மோகன் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். இதற்கிடையில் கடந்த 6ம் தேதி மோகனின் வீட்டில் பீரோவில் வைத்திருந்த மூன்றரை சவரன் தங்க நகைகள் திருடு போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த மோகன் விருதம்பட்டு போலீசில் புகார் அளித்தார். மேலும் தனியார் ஹோம் கேர் நர்சு மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வியாபாரி வீட்டில் தங்க நகை திருட்டு காட்பாடியில் appeared first on Dinakaran.

Read Entire Article