
.லண்டன்,
ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் மிகவும் கவுரவமிக்கதும், முதன்மையானதுமான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
நூற்றாண்டு கால பழமை வாய்ந்த விம்பிள்டன் டென்னில் புல்தரையில் நடக்கக்கூடிய ஒரு போட்டியாகும். அத்துடன் வீரர், வீராங்கனைகள் வெள்ளைநிற உடை மட்டுமே அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடும் இந்த போட்டியின் மற்றொரு சிறப்பம்சமாகும். இதையொட்டி கடந்த சில தினங்களாக வீரர், வீராங்கனைகள் அங்கு பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 128 வீரர்கள் களம் இறங்கினாலும் 'நம்பர் ஒன்' வீரர் ஜானிக் சினெர் (இத்தாலி), 2-ம் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), ஒலிம்பிக் சாம்பியனான நோவக் ஜோகோவிச் (செர்பியா), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), இங்கிலாந்தின் ஜேக் டிராப்பர் ஆகியோர் இடையே தான் பட்டம் வெல்ல கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சினெர் முதல் சுற்றில் சக நாட்டவரான லுகா நார்டியை சந்திக்கிறார்.
2 முறை சாம்பியனான அல்காரஸ், இத்தாலியின் பாபியோ போக்னினியுடன் முதல் சவாலை தொடங்குகிறார். அண்மையில் பிரெஞ்சு ஓபன் இறுதி சுற்றில் 5½ மணி நேரம் போராடி சினெரை தோற்கடித்து வரலாறு படைத்த 22 வயதான அல்காரஸ் சூப்பர் பார்மில் உள்ளார். அவர் கூறுகையில், 'உண்மையிலேயே இந்த பட்டத்தை மீண்டும் ஒரு முறை கையில் ஏந்துவதற்கு ஆர்வமுடன் உள்ளேன். விம்பிள்டன் பட்டத்தை தொடர்ச்சியாக 3 முறை எத்தனை வீரர்கள் வென்றிருக்கிறார்கள் என்பது குறித்து நான் சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை. போட்டிக்கு சிறந்த முறையில் தயாராகி, மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன்' என்றார்.
24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளரான 38 வயதான ஜோகோவிச், 2023-ம் ஆண்டுக்கு பிறகு எந்த கிராண்ட்ஸ்லாமும் வென்றதில்லை. இளம் சூறாவளிகள் சினெர், அல்காரசின் சகாப்தம் தொடங்கியதும் ஜோகோவிச் ஆதிக்கம் வெகுவாக குறைந்து விட்டது. விம்பிள்டனில் கடந்த இரு ஆண்்டுகளாக இறுதி ஆட்டத்தில் அல்காரசிடம் கோப்பையை கோட்டை விட்டார். என்றாலும் தன்னை தீவிரமாக தயார்படுத்தியுள்ளார்.
முதல் சுற்றில் அவர் பிரான்சின் அலெக்சாண்ட்ரே முல்லரை எதிர்கொள்கிறார். ஒரு வேளை இங்கு ஜோகோவிச் பட்டத்தை சொந்தமாக்கினால், விம்பிள்டனை அதிக முறை ருசித்தவரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரின் (8 முறை) சாதனையை சமன் செய்து விடுவார். கணிப்புபடி எல்லாம் சரியாக நகர்ந்தால் ஜோகோவிச் கால்இறுதியில் 4-ம் நிலை வீரரான டிராப்பருடன் மோத வேண்டி வரலாம்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 'நம்பர் ஒன்' நட்சத்திரம் அரினா சபலென்கா (பெலாரஸ்), 2-ம் நிலை வீராங்கனை கோகோ காப், ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து), ஜாஸ்மின் பாவ்லினி (இத்தாலி), ஒலிம்பிக் சாம்பியன் கின்வென் ஜாங் (சீனா), மிரா ஆன்ட்ரீவா (ரஷியா), நடப்பு சாம்பியன் பார்போரா கிரெஜ்சிகோவா (செக்குடியரசு), எம்மா ரடுகானு (இங்கிலாந்து) உள்ளிட்டோரில் ஒருவரே மகுடம் சூடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
தனது முதலாவது விம்பிள்டன் கோப்பைக்கு குறி வைத்துள்ள சபலென்கா, முதல் ரவுண்டில் தகுதி நிலை வீராங்கனையான கார்சன் பிரான்ஸ்டினுடன் (கனடா) மோதுகிறார். சபலென்கா கால்இறுதியில் அமெரிக்காவின் மேடிசன் கீசை சந்திக்க நேரிடலாம். பிரெஞ்சு ஓபன் சாம்பியனான கோகோ காப் முதல் ரவுண்டில் உக்ரைனின் டயானா யாஸ்டிரிம்ஸ்காவுடனும், ஸ்வியாடெக், ரஷியாவின் குடெர்மித்தோவுடனும் களம் காணுகிறார்கள். முதல் நான்கு சுற்றை வெற்றிகரமாக கடந்தால் கால்இறுதியில் கோகோ காப்- ஸ்வியாடெக் பலப்பரீட்சை நடத்துவார்கள்.
போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.627 கோடியாகும். இது சென்ற ஆண்டை விட 7 சதவீதம் கூடுதலாகும். இதில் ஒற்றையரில் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ.35 கோடியும், 2-வது இடத்தை பிடிப்போருக்கு ரூ.17¾ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும். முதல் சுற்றில் தோற்றால் கூட ரூ.77 லட்சம் கிடைக்கும். இரட்டையர் பிரிவில் பட்டம் வெல்லும் ஜோடி கூட்டாக ரூ.8 கோடியை பெறுவார்கள்.
வருகிற 13-ந்தேதி வரை நடக்கும் இந்த டென்னிஸ் திருவிழாவை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. முதல் நாள் ஆட்டங்கள் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. தொடக்க நாளில் அல்காரஸ், அலெக்சாண்டர் ஸ்வெரேவ், சபலென்கா, எம்மா ரடுகானு, ரஷியாவின் மெட்விடேவ் உள்ளிட்டோர் ஆடுகிறார்கள்.