
சென்னை,
சென்னை விமான நிலையத்தின் மீது கடந்த சில நாட்களாக மர்ம நபர்கள் இரவு நேரங்களில் லேசர் ஒளி அடித்து விமான சேவைக்கு இடையூறு அளித்து வருகின்றனர். குறிப்பாக தரையிறங்கும் விமானங்களின் மீது தொடர்ச்சியாக லேசர் ஒளி அடிக்கப்படுகிறது. கடந்த 2 வாரங்களில் விமானங்களின் மீது 3 முறை லேசர் ஒளி அடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் பரங்கிமலை, கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை விமான நிலையம் அருகே லேசர் மற்றும் பலூன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை விமான நிலைய நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,
சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் லேசர் ஒளியை பயன்படுத்த வேண்டாம். லேசர் ஒளிகள், வெப்பக்காற்று பலூன் போன்றவற்றால் விமான பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை உண்டாக்கும். விமானம் தரையிறங்கும்போது, விமானியின் பார்வையை பாதித்து, பயணிகள் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும். விமான நிலைய சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. விமானங்களின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுவது குற்றச்செயல். இதனை மீறி லேசர் ஒளி மற்றும் பலூன்களை பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.