
புதுடெல்லி,
மெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் 'பால்கன் 9' ராக்கெட் மூலம் 'டிராகன்' விண்கலம் நேற்று மதியம் 12.01 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலத்தில் அமெரிக்கா, இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என 4 பேர் பயணம் செய்தனர்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) வீரர் சுபான்ஷு சுக்லா (39) இந்த பயண திட்டம் மூலம் விண்வெளிக்கு சென்றுள்ளார். முன்னதாக விண்வெளி பயணத்தின் துவக்கத்தின்போது "ஜெய்ஹிந்த்.. ஜெய்பாரத்.." என்று முழங்கி, இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா தனது தேச பக்தியை வெளிப்படுத்தினார்.
'பால்கன் 9' ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட 'டிராகன்' விண்கலம் சுமார் 28 மணி நேரத்தில் 418 கி.மீ. பயணித்து சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது. தொடர்ந்து 'டிராகன்' விண்கலம் விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. பின்னர் விண்கலத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா மற்றும் குழுவினர் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்குள் நுழைந்தனர். ஏற்கனவே அங்கு இருக்கும் விண்வெளி வீரர்கள் அவர்களை வரவேற்றனர்.
இந்த விண்வெளி பயணத்தின் மூலம், ராகேஷ் சர்மாவை தொடர்ந்து சுமார் 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்கு சென்ற 2-வது இந்தியர், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற முதல் இந்தியர் ஆகிய சாதனைகளை சுபான்ஷு சுக்லா படைத்துள்ளார்.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் சுபான்ஷு சுக்லா மற்றும் குழுவினர் 14 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர். இந்நிலையில், விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடினார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, "நீங்கள் இன்று உங்கள் தாய்நாட்டில் இருந்து வெகு தொலைவில் இருந்தாலும், இந்தியர்களின் மனதிற்கு மிக நெக்கமாக இருக்கிறீர்கள்" என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்த சுபான்ஷு சுக்லா, "இது எனது பயணம் மட்டுமல்ல. இது நமது நாட்டின் பயணம். இந்த பயண அனுபவங்களை நான் நன்றாக உள்வாங்கிக் கொள்கிறேன்" என்றார்..
இதையடுத்து பிரதமர் மோடி, "விண்வெளியில் இதுவரை நீங்கள் பார்த்த விஷயங்கள் பற்றி கூறுங்கள்" என்று சுபான்ஷு சுக்லாவிடம் கேட்டார். அதற்கு அவர், "சிறிது நேரத்திற்கு முன்பு நாங்கள் ஹவாய் தீவிற்கு மேலே பறந்து கொண்டிருந்தோம். ஒரு நாளைக்கு நாங்கள் 16 சூரிய உதயங்களையும், 16 சூரிய அஸ்தமனங்களையும் காண்கிறோம். இங்கு எல்லாமே வித்தியாசமாக இருக்கிறது.
நாங்கள் சுமார் ஒரு ஆண்டு பயிற்சி பெற்று, பல்வேறு நுணுக்கங்களை கற்றுக் கொண்டோம். ஆனால் இங்கு வந்த பிறகு அனைத்தும் வேறு மாதிரி இருக்கிறது. ஏனெனில் இங்கு புவியீர்ப்பு விசை கிடையாது. இங்கு தூங்குவது என்பது மிகப்பெரிய சவாலான விஷயம். இந்த சூழலுக்கு பழகிக்கொள்ள சில காலம் பிடிக்கும்" என்றார்.
இதைத் தொடர்ந்து, "விண்வெளிக்கு சென்ற பிறகு உங்களுக்கு தோன்றிய முதல் சிந்தனை என்ன?" என்று பிரதமர் மோடி கேட்டதற்கு, "இங்கிருந்து பூமியை பார்க்கும்போது எந்த எல்லையும் தெரியவில்லை. அனைத்தும் ஒன்றாகவே இருக்கிறது. எந்த எல்லையும், நாடுகளும், மாநிலங்களும் தெரிவதில்லை. நமது இந்திய நாடு வரைபடத்தில் பார்ப்பதை விட உண்மையில் மிக பெரிதாகவும், பிரம்மாண்டமாகவும் இருக்கிறது. நாம் அனைவரும் மனிதகுலத்தின் ஒரு பகுதி, பூமி நமது ஒரே வீடு, நாம் அனைவரும் அதில் இருக்கிறோம்" என்று சுபான்ஷு சுக்லா தெரிவித்தார்.