விட்டால் கிடைக்கும்? விட முடியுமா?

3 weeks ago 7

மோட்சம் என்கின்ற சொல் ஆன்மிகத்தில் அதிகம் பேசப்படும் சொல். எந்தச் சமயமாக இருந்தாலும் இந்த மோட்சம் என்கின்ற சொல் அடிக்கடி சொல்லப்படும். மானுட வாழ்வின் இலக்கு மோட்சம் பெறுதல் என்பார்கள். மோட்ச உலகம் என்பது தனி உலகம். அந்த உலகத்தில் சந்தோஷம் இருக்கும். நிம்மதி இருக்கும். பிரச்னைகள் இருக்காது. இந்த நிலவுல கத்தில் வாழ்ந்து முடிந்த பிறகு அந்த உலகத்தை அடைவதுதான் வாழ்வின் நோக்கம். அதற்குத்தான் சமயம், வழிபாடு எல்லாம் என்று சமயப் பெரியவர்கள் சொல்லுகின்றார்கள். அது உண்மைதான் அதற்குள் நான் போக விரும்பவில்லை. ஆனால் வாழும் வரை நிம்மதி வேண்டுமே? அமைதி வேண்டுமே?

துன்பம் இல்லாமல் இருக்க வேண்டுமே? அதுவும் முக்கியமல்லவா.இந்த அடிப்படையில் மோட்சம் என்கின்ற சொல்லின் பொருளைச் சிந்தித்தால் நமக்குக் கிடைக்கும் விடை விடுதலை.கிரகணத்தின்போது பஞ்சாங்கத்தில் இரண்டு நேரங்களைக் குறித்திருப்பார்கள். ஒன்று கிரகணம் துவங்கும் நேரம் (ஸ்பரிசம்). இன்னொன்று கிரகணம் விடும் நேரம். கிரகணம் விடும் நேரத்தை மோட்சம் என்று குறித்திருப்பார்கள். என்ன பொருள்? மறைக்கப்பட்ட சூரியனோ சந்திரனோ இருளிலிருந்து விடுபட்டு முழு வெளிச்சம் பெறுவதை மோட்சம் என்று குறித்திருப்பார்கள்.தொடுதல், விடுதல்-இந்த சொல்லாட்சிகளை கவனியுங்கள். தொட்டது விடுவது மோட்சம்.வீடுமின் முற்றவும் வீடு செய்து உம்முயிர்.

வீடு உடையான் இடை வீடு செய்ம்மினே. என்பது திருவாய்மொழி.ஆக மோட்சம். என்பது விடுதல் என்று பொருள் படும். விடுதலை என்று பொருள் படும்.இனி அடுத்த கேள்வி? எதிலிருந்து விடுதலை?துன்பங்களில் இருந்து விடுதலை! துன்பங்களில் இருந்து விடுபடுதல் என்றால், துன்பங்களில் கட்டுப்பட்டு இருக்கிறோம் என்று பொருள். கட்டுப்பட்ட ஒன்றிலிருந்துதானே விடுதலை பெறமுடியும்.சரி, அடுத்த கேள்வி. விடுதலை பெறுவது எளிதான காரியமா? என்றால் உண்மையில் எளிதான காரியம்தான். ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.

துன்பத்தைப் பிடித்துக் கொள்வதோ விட்டு விடுவதோ நம் கையில்தான் இருக்கிறது.ஆனால், நம்முடைய அறியாமையினால் நாம் பெரும்பாலும் துன்பத்தை விட்டுவிடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறோம்.ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு விஷயத்தைச் சொல்லுவார்.உங்களுக்கு இறைவன் இரண்டு கரங்களைத் தந்திருக்கிறான். ஒரு கரத்தால் உலகியலைப் பிடித்துக்கொள்ளுங்கள். ஒரு கரத்தால் இறைவனைப் பிடித்துக் கொள்ளுங்கள். எக்காரணத்தை முன்னிட்டும் இறைவனை பிடித்த கையை யிட்டு விட வேண்டாம். ஒரு கட்டத்தில் உலகியலைப் பிடித்த கரத்தை விட்டுவிட்டு இரண்டு கரங்களாலும் இறை வனைப் பிடித்துக்கொண்டு கரையேறுங்கள் என்பார். இந்தக் கரையேறுதல்தான் மோட்சம் என்பது.

நாம் என்ன செய்கின்றோம் என்றால் ஒரு கையால் உலகியலைப் பிடித்துக் கொள்வதற்குப் பதிலாக இரண்டு கைகளாலும் உலகியலைப் பிடித்துக் கொள்ளுகிறோம். அதை விடுவதற்கு மனமில்லை.கஷ்டம் என்று தெரிந்தாலும்கூட, நாம் அதை விட்டுவிடுவதற்கு மனம் இல்லாமல், ஏதோ சாக்கு போக்கு சொல்வதால் அந்தக் கஷ்டங்கள் நம்மை விடாமல் பற்றிக் கொண்டிருக்கிறது. அதனால் நம்மால் மோட்சம் பெற முடிவதில்லை.இதை நன்கு புரிந்து கொள்வதற்கு இந்தக் கதை உங்களுக்கு உதவும்.

கோயில் வாசலில் உள்ள பெட்டிக் கடையில், பக்திப் பழமாக உட்கார்ந் திருப்பார் ஒருவர். அவர் கடைக்கு ஒரு துறவி வருவார். அவரிடம், ‘எனக்கு ஆசையே இல்லை. பந்தங்களில் இருந்து விடுபட நினைக்கிறேன். இன்னும் அதற்கான வேளை வரவில்லை’ என்பார்.ஒருமுறை இவர் ஆதங்கத்தைப் பார்த்து, ‘‘நீ சரின்னு சொன்னா, இப்பவே உன்னை அழைச்சிக்கிட்டுப் போயிடுறேன்?’’ என்று கேட்டார் .இப்படி அவர் சொல்வார் என்று எதிர்பார்க்கவில்லை. திகைத்துப்போய் விட்டார்.

சுதாரித்துக்கொண்டு ‘‘வரலாம் சுவாமி. ஆனா, வீட்ல சின்ன வயசுல படிக்கிற புள்ளைங்க இருக்கறப்ப, எப்படி விட்டுட்டுப் போறதுன்னுதான் ஒரு யோசனை. அவங்களுக்கு உத்தியோகம் கல்யாணம் காட்சின்னு ஆயிட்டா… அப்புறம் நிம்மதியா கிளம்பிடலாம்’’ என்றார்.சிரித்தபடியே கிளம்பிச் சென்றார் துறவி. ஆண்டுகள் ஓடின..ஒருநாள் திரும்ப வந்தார் இவரைச் சந்தித்து ‘‘எப்படி வாழ்க்கை போகிறது? பிள்ளைகள் எல்லாம் படித்து விட்டார் களா? வேலைக்குப் போய் விட்டார்களா? கல்யாணம் காட்சி செய்து விட்டாயா?’’ என்று கேட்டவுடன் எல்லாவற்றையும் மகிழ்ச்சியாக சொன்னார்.துறவி புன்னகைத்தபடி, ‘‘சரி…

இப்பவாவது புறப்படேன்!’’ என்றார்.‘‘எங்கு?’’.‘‘மோட்சத்திற்கு’’‘‘சந்தோசம் சுவாமி. ஆனா, இன்னும் அதற்கான வேளை வரலை’’-.‘‘எப்ப வரும்?’’‘’இப்பத் தான் பிள்ளைங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டேன். பேரப் பிள்ளைங்களையும் கண்ணாலே பார்த்துட்டா. அப்புறம் புறப்பட வேண்டியதுதான்’’..விடாக்கண்டனான துறவி மறுபடி சில ஆண்டுகளுக்குப் பிறகு, வந்தார். ‘‘பிள்ளைகளுக்குக் கல்யாணம் ஆகி பேரப்பிள்ளைகள் பிறந்துவிட்டார்கள் என்று கேள்விப்பட்டேன். உன் கடையை கவனித்துக் கொள்வதற்கு ஒரு பையன் தயாராகி வியாபாரம் நன்றாகப் போகிறது என்றும் கேள்விப்பட்டேன். உன் பிரச்சனை எல்லாம் முடிந்துவிட்டது. இப்போதாவது வருகிறாயா?’’
‘‘கொஞ்சம் பொறுங்க… அடுத்த முறை கட்டாயம் உங்களோடு வந்து விடுகிறேன். எனக்கு ஒன்றும் இந்த வாழ்வில் இஷ்டம் இல்லை.ஓரிரண்டு ஆண்டுகள் கழிந்தன.

மீண்டும் வந்தார் துறவி.ஆனால், அந்த ஆசாமியைக் காணோம். கடையில் இருந்தவரிடம் விசாரித்தார் . ‘‘சாமி… எங்க அப்பாதான் அவரு. ‘எல்லா பந்தங்களையும் விட்டுட்டு உங்ககூட வந்துடணும்னு சொல்லிகிட்டே இருந்தாரு, போன வருஷம் ஒருநாள்… நெஞ்சு வலின்னவரு, பொட்டுனு போயிட்டாரு. உயிரோட இருந்திருந்தா, நிச்சயம் உங்க கூட வந்துருப்பாரு.’’ கவலையுடன் சொன்னார் மகன்.இதைக் கேட்ட துறவி, ‘‘உங்க அப்பா எங்கேயும் போயிடலே. இங்கதான் இருக்கார்’’. ‘‘எங்கே சுவாமி?’’‘‘அதோ… அங்கே பார்… அதென்ன?’’‘‘அது நாய்… இங்கேதான் சுத்திக்கிட்டிருக்கு.’’‘‘அதான் உங்க அப்பா’’ என்றவர், கையைத் தட்டினார்.‘‘அந்த நாய் வாலாட்டியபடியே ஓடி வந்தது. நாயின் தலையைத் தட்டி பேசினார்.’’ ‘‘என்னப்பா வருகிறேன் வருகிறேன் என்று சொல்லி ஏமாற்றி விட்டாயே! இப்பொழுது நீ நாயாக பிறந்து விட்டாய். மிகுந்த கஷ்டமான பிறவி. இப்பொழுதும் கெட்டுவிடவில்லை… வா உன்னை மோட்சத்திற்கு அழைத்துச் செல்கின்றேன்.’’‘‘வேணாம் சுவாமி. ஏராளமா சொத்து சேர்த்து வச்சுட்டேன். பிள்ளைங்க சரியா காப்பாத்துவாங்கன்னு தோணல. அதுதான் நாயா பிறந்து காவல் காத்துக்கிட்டு கிடக்கிறேன்’’ இப்படி நாய் சொன்னதும், ‘கடகட’வெனச் சிரித்தார் துறவி. பிறகு சொன்னார். ‘‘அறியாமையில் சுகம் கண்டவர்களுக்கு ஆன்ம விடுதலை எப்படிக் கிடைக்கும்?’’

The post விட்டால் கிடைக்கும்? விட முடியுமா? appeared first on Dinakaran.

Read Entire Article