விஜய்யிடம் மன்னிப்பு கேட்கணுமா? - கோபத்தில் கொதித்த வேல்முருகன்

1 day ago 3

கடலூர்,

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

"மாற்று கட்சியினர் தங்களது கட்சியில் இணையும் விழாவில் நான் விஜய் குறித்து பேசினார். நடிகர் விஜய், தனது இளமைக்காலம் முழுவதும் சினிமாவில் நடித்துவிட்டு, பொருள் ஈட்டிவிட்டு தற்போது அரசியலுக்கு வந்துள்ளார். இதனை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் வந்த உடனேயே செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்குத்தான் செல்வேன் என்கிறார். ஏன் உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சிக்கு செல்லமாட்டீர்களா என்ற அரசியல் விமர்சனங்களை முன்வைத்தேன்.

அதேபோல, நடிகருக்கு அதிக முன்னுரிமை கொடுப்பதை தவிர்க்க வேண்டுமென பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு, குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு கூறவேண்டுமென வலியுறுத்தினேன். மேலும், விஜய்யை வாழும் காமராஜர் என்றெல்லாம் அழைக்கிறார்கள். காமராஜரை, ஒரு வருடத்திற்கு முன்பு வந்தவரோடு ஒப்பிட்டுப் பேசுவது சரியல்ல என்று கூறினேன். நடிகரின் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்வதை தவிர்த்துவிட்டு பெற்றோருக்கு சேவை செய்யுங்கள் என வலியுறுத்தினேன்.

சுமார் 1 மணி 40 நிமிடங்கள் நான் பேசியதை முழுவதுமாக கேட்காத சில அரைவேட்காடுகள், எங்கள் தளபதியை பற்றி பேசியுள்ளாய்? மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார்கள். நான் சொல்லாத ஒன்றை சொல்லியதாக கூறி மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார்கள். இது சரியல்ல. நான் பேசியதில் விஜய்க்கு ஏதும் ஆட்சேபனை இருந்தால், என்னைப்போல பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி கேள்வி கேட்கட்டும். அதை விட்டுவிட்டு மற்றவர்களை வைத்து வீடியோ போடுவது, பேச வைப்பது வளர்ந்துவரும் விஜய்க்கு அழகல்ல. இதை உடனே விஜய் தடுத்து நிறுத்த வேண்டும்."

இவ்வாறு அவர் பேசினார்.

 

Read Entire Article