
சிவகாசி,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் மண்டல பகுதியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக வெற்றிக் கழக கட்சியின் பூத் கமிட்டி கூட்டம் கோவையில் நடந்தது. இந்த கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. நடிகர்களை பார்க்க எப்போதும் கூட்டம் கூடுவது வழக்கம். 9 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது தமிழகம் முழுவதும் நடிகர் வடிவேல் பிரசாரம் செய்தார்.
அப்போது அவரை பார்க்க ஏராளமான பொதுமக்கள் வந்தனர். ஆனால் வந்தவர்கள் வடிவேல் ஆதரவு கேட்ட வேட்பாளருக்கு ஓட்டு போடவில்லை. அந்த தேர்தலில் நான் 38 ஆயிரத்து 888 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். அதேபோல் தான் நடிகர் விஜய்யை பார்க்க வரும் கூட்டம் வாக்குகளாக மாறாது. வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்பதுதான் அ.தி.மு.க.வின் குறிக்கோள். எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்கும் யாருடனும் கூட்டணி அமைக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.