விக்கிரவாண்டியில் தம்பியை சுட்டுக்கொன்ற அண்ணன் சிறையில் அடைப்பு: மனைவி, தாயாருக்கு தீவிர சிகிச்சை

6 hours ago 3

விக்கிரவாண்டி: மது குடித்ததை தட்டிக்கேட்டதால் மனைவி, தம்பி மற்றும் தாயாரை ஏர்கன் துப்பாக்கியால் வாலிபர் சுட்டதில் தம்பி பரிதாபமாக இறந்தார். பலத்த காயத்துடன் மனைவி, தாயார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கியால் சுட்ட வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வாக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மனைவி பச்சையம்மாள்(60). கணவர் இறந்துவிட்டதால் மகன் தென்னரசுவுடன் (34) வசித்து வருகிறார். விவசாயியான தென்னரசுவுக்கும் விக்கிரவாண்டி அடுத்த தெளி கிராமத்தை சேர்ந்த லாவண்யாவுக்கும் கடந்த மாதம் தான் திருமணம் நடந்தது. இதனிடையே புதுமாப்பிள்ளையான தென்னரசு குடிப்பழக்கத்திற்கு அடிமையானார்.

இதற்காக மருந்து மாத்திரைகளும் சாப்பிட்டு வந்துள்ளார். நேற்று காலை தென்னரசு குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். இதனை மனைவி லாவண்யா தட்டிக்கேட்டபோது ஆத்திரமடைந்த தென்னரசு, ஆன்லைனில் வாங்கி வைத்திருந்த ஏர்கன் துப்பாக்கியால் அவரை சுட்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த தாய் பச்சையம்மாள் மற்றும் பக்கத்து வீட்டில் இருந்து வந்த சித்தப்பா மகன் கார்த்திக்கையும் (28) அவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். பலத்த காயமடைந்த மூவரையும் கிராம மக்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வீட்டில் இருந்த ரூ.2.65 லட்சம் மதிப்பிலான 3 ஏர்கன் துப்பாக்கிகளை பறிமுதல் செய்து தென்னரசுவை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதனிடையே படுகாயமடைந்த 3 பேரில் கார்த்திக்கிற்கு மூளையில் குண்டு பாய்ந்ததால் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அதேபோல் மனைவி லாவண்யாவும் சென்னைக்கு மாற்றப்பட்டார். பச்சையம்மாளுக்கு நெற்றி பொட்டு, இடது காதில் குண்டடி பட்டதால் அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கார்த்திக் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இவர் சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு சட்டப்படிப்பு படித்து வந்தவர் என தெரிய வந்துள்ளது. இதனிடையே விவசாயி தென்னரசுவை போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விக்கிரவாண்டியில் தம்பியை சுட்டுக்கொன்ற அண்ணன் சிறையில் அடைப்பு: மனைவி, தாயாருக்கு தீவிர சிகிச்சை appeared first on Dinakaran.

Read Entire Article