சென்னை: வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். வால்பாறை தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி உடல்நலக் குறைவால் காலமானார். புற்றுநோய் காரணமாக கோவையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் 2021ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் அமுல் கந்தசாமி. 60 வயதான இவருக்கு சமீப காலமாக அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதற்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அமுல் கந்தசாமிக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் அவருக்கு உடல்நிலை மோசமான நிலையில் தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார். கடந்த ஐந்து நாட்களாக அமுல் கந்தசாமி சுயநினைவின்றி இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர் உயிரிழந்துவிட்டதாகவும் கோவை முழுவதும் தகவல்கள் பரவின.
அமுல் கந்தசாமி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று பிற்பகல் அமுல் கந்தசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு கலைச் செல்வி என்ற மனைவியும், சுயநிதி என்ற மகளும் உள்ளனர். அமுல் கந்தசாமி மறைவுக்கு அதிமுகவில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், வால்பாறை தொகுதி மக்களுக்கும், அதிமுக கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்
The post வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.