வால்பாறை அதிமுக எம்எல்ஏ திடீர் மரணம்: எடப்பாடி நேரில் அஞ்சலி

5 hours ago 3

அன்னூர்: உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வால்பாறை தொகுதி அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி நேற்று காலமானார். கோவை மாவட்டம் வால்பாறை தொகுதி அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி (60), கடந்த 10 நாட்களுக்கு மேல் உடல்நிலை பாதிப்பு காரணமாக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன் தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி அமுல் கந்தசாமி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான கோவை அடுத்த அன்னூருக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன.

அங்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் அமுல் கந்தசாமி உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டம், வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தி.க.அமுல் கந்தசாமி உடல்நலக் குறைவால் நேற்று மரணமடைந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். கோவை மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவராகவும், தற்போது வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் நல்ல முறையில் மக்கள் பணியாற்றியவர். அன்புச் சகோதரர் அமுல் கந்தசாமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இந்த துயரத்தை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என கூறியுள்ளார்.

மரணமடைந்த அமுல் கந்தசாமி கோவை மாவட்டம் அன்னூர் அருகே ஒட்டர்பாளையம் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர். 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், சுபாநிதி என்ற மகளும் உள்ளனர். கடந்த 1980ல் அதிமுகவில் இணைந்தார். கட்சியில் மாவட்ட மாணவரணி, இளைஞர் அணி மாவட்ட செயலாளராக இருந்து வந்தார். கட்சியின் பொதுக்குழு உறுப்பினர், 2 முறை மாவட்ட கவுன்சிலராக இருந்து வந்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமாக இருந்த அமுல் கந்தசாமி, கடந்த 2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக வால்பாறை (தனி) தொகுதியில் போட்டியிட்டு, இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆறுமுகத்தை 12 ஆயிரத்து 223 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, வெற்றி பெற்று எம்எல்ஏவாக பதவி வகித்து வந்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், வால்பாறை தொகுதி மக்களுக்கும், அதிமுகவினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post வால்பாறை அதிமுக எம்எல்ஏ திடீர் மரணம்: எடப்பாடி நேரில் அஞ்சலி appeared first on Dinakaran.

Read Entire Article