*எம்எல்ஏ செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்
கரூர் : கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம், வாங்கல் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமையில், கரூர் எம்எல்ஏ செந்தில்பாலாஜி, புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது எம்எல்ஏ செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளதாவது:தமிழ்நாடு முதல்வரின் சிறப்பான திட்டங்களால் மருத்துவம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது.
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறையின் சார்பாக புற்று நோய் கண்டறியதல் சிற்பபு திட்டத்தினை முதற்கட்டமாக ஈரோடு, திருப்பத்தூர், கன்னியாகுமரி மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் சமூக அளவிலான கருப்பை வாய், மார்பக மற்றும் வாய் புற்று நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் முன்னோடி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு வாய் புற்று நோய் கண்டறிதலும், 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய் புற்று நோய் கண்டறியதல் மற்றும் சிகிச்சை விரிவாக்க திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் புற்று நோய் இல்லாத மாவட்டமாக உருவாக்கும் நிலையை அடைய முடியும்.இந்த சிகிச்சைக்கான பரிசோதனைகள் முழுதும் இலவசம் எனப்தால் ஏழை எளிய மக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும். பரிசோதனையின் போது புற்று நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால் மேல்சிகிச்சைக்கு தேவைப்படும் அனைத்து மருத்துவ செலவுகளை அரசே ஏற்கும்.
மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் பணிபுரியும் பெண் சுகாதார தன்னார்வலர்களை கொண்டு புற்று நோய்களுக்கான விழிப்புணர்வு வழங்கி பரிசோதனை செய்து கொள்வதற்கான அழைப்புகளை அவரவர் வீடுகளிலேயே வழங்கப்படும்.கரூர் மாவட்டத்தில் 37 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 7 அரசு மருத்துவமனைகள் மற்றும் கருர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உட்பட 45 மையங்களில் புற்று நோய்க்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், இந்த திட்டத்தின் மூலம் கூடுதலாக 101 கிராமப்புற சுகாதார நலவாழ்வு மையங்கள் மற்றும் 4 நகர்ப்புற நலவாழ்வு மைய்கள் உட்பட 105 மைங்களில் இந்த சேவை விரிவுபடுத்தப்பட்டு புற்று நோய்க்கான இலவச பரிசோதனை வசதிகள் மக்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே வழங்கப்படவுள்ளது. கரூர் மாவட்டத்தில் இதுநாள் வரை 3,658 நபர்களுக்கு ஒருங்கிணைந்த புற்று நோய் கண்டறிதலுக்கான அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை வாய் புற்று நோய்க்கு 967 நபர்கள், கர்ப்பபை வாய் புற்று நோய்ககு 666 பெண்களும் மற்றும் மார்பக புற்று நோய்க்கு 747 பெண்களும் பரிசோதனை செய்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 3 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்றுள்ளது என்றார் செந்தில்பாலாஜி.
இதனைத் தொடர்ந்து, மண்மங்கலம் வட்டம், கடம்பன்குறிச்சியில் நீர் வள ஆதாரத்துறையின் மூலம் பாப்புலர் வாய்க்கால் பராமரிப்பு பணியின் கீழ் நெடுகை 2 கிமீ முதல் 9 கிமீ வரை படர்ந்துள்ள செடி கொடிகளை ரூ. 7 லட்சம் மதிப்பில் அப்புறப்படுத்தும் பணியானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை எம்எல்ஏ செந்தில்பாலாஜி பார்வையிட்டார்.
இந்த நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) செழியன், துணை இயக்குநர் சுப்பிரமணி உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
The post வாங்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை விரிவாக்க திட்டம் appeared first on Dinakaran.