
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டி- புதுக்குடி மீனவ கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் வழக்கம் போல் தனது நாட்டுப்படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சுமார் ஐந்து டன் எடையுள்ள பெரிய பாறை மீன்கள் கூட்டமாக அவரது வலையில் சிக்கியுள்ளது.
இதனைக் கண்டு ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்த மீனவர் கண்ணன் தனது வலையில் சிக்கிய சுமார் 5 டன் எடையுள்ள மீன்களை பிடிப்பதற்காக அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை அழைத்துள்ளார். அவர்களின் உதவியுடன் மூன்று நாட்டுப்படகுகளைப் பயன்படுத்தி வலையில் சிக்கியிருந்த அனைத்து மீன்களையும் பிடித்து கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தார்..
இந்த 5 டன் எடை கொண்ட மிகப்பெரிய பாறை மீன்களின் மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுபோன்ற மிகப்பெரிய அளவிலான பாறை மீன்கள், நாட்டுப்படகு மீனவர்களின் வலையில் கிடைப்பது மிகவும் அரிதிலும் அரிதாக பார்க்கப்படுவதால் இது அப்பகுதி மீனவர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.