ஈரோடு, ஜூன்14: ஈரோடு வ.உ.சி காய்கறி பெரிய மார்க்கெட்டில் 700க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது. தாளவாடி, திருப்பூர், ஒட்டன்சத்திரம், ஆந்திரா போன்ற பகுதிகளிலிருந்து தினமும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கு சில்லரை மற்றும் மொத்த வியாபாரம் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக விளைச்சல் குறைந்து வரத்தும் குறைந்தது. இதனால் காய்கறிகள் விலை அதிகரித்து காணப்பட்டது.
குறிப்பாக, ஒரு கிலோ பீன்ஸ் கடந்த வாரம் ரூ.156க்கு விற்பனையானது. வரத்து குறைந்தும், தொடர் முகூர்த்தம் காரணமாக தேவை அதிகரித்து விலையும் உயர்ந்து வந்தது. இந்நிலையில் ஊட்டி, கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் கடந்த வாரம் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பீன்ஸ் விளைச்சல் அதிகரித்து வரத்தும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதனால் பீன்ஸ் விலை அதிரடியாக சரிந்து வருகிறது. நேற்று ஈரோடு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டிற்கு 2 டன் பீன்ஸ்கள் வரத்தாகின. வரத்து அதிகரிப்பு எதிரொலியாக, பீன்ஸின் விலை நேற்று அதிரடியாக குறைந்து ஒரு கிலோ ரூ.50-க்கு விற்பனையானது. அதாவது, ஒரு வாரத்தில் மட்டும் பீன்ஸ் ஒரு கிலோ ரூ. 100 வரை குறைந்துள்ளது. தொடர்ந்து வரத்து அதிகரித்து வருவதால், மேலும் விலை குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
The post வரத்து அதிகரித்ததால் பீன்ஸ் விலை குறைவு ஒரு கிலோ ரூ.150ல் இருந்து ரூ.50 ஆக சரிவு appeared first on Dinakaran.