வங்காளதேசம்: ஆன்மீக தலைவர் கைதான வழக்கு - விசாரணை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைப்பு

6 months ago 19

டாக்கா,

வங்காளதேசத்தின் தேசிய கொடியை அவமதித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், 'சமிலிட்டா சனாதனி ஜோட்' என்ற இந்து மத அமைப்பின் தலைவர் சின்மய் கிருஷ்ண தாஸ் உள்ளிட்ட 19 பேர் மீது கடந்த அக்டோபர் 30-ந்தேதி வங்காளதேசத்தில் உள்ள சத்தோகிரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அங்கு நடந்த இந்து மத ஊர்வலத்தின்போது வங்காளதேச கொடி அவமதிக்கப்பட்டதாக அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து டாக்கா சர்வதேச விமான நிலையத்தில் சின்மய் கிருஷ்ண தாஸ் கடந்த மாதம் 25-ந்தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சத்தோகிரம் கோர்ட்டில் சின்மய் கிருஷ்ண தாஸ் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்க கோர்ட்டு மறுப்பு தெரிவித்தது. இதனிடையே வங்காளதேசத்தில் இந்து மத ஆன்மிக தலைவர் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சத்தோகிரம் கோர்ட்டில் இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது இந்த வழக்கை வரும் ஜனவரி 2-ந்தேதிக்கு ஒத்திவைப்பதாக கோர்ட்டு உத்தரவிட்டது. அதுவரை சின்மய் கிருஷ்ண தாஸ் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article