வக்பு மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை தீர்மானம்

3 days ago 2

சென்னை,

நாடு முழுவதும் உள்ள வக்பு வாரிய சொத்துகளை பதிவு செய்து வெளிப்படைத்தன்மையுடன் நிர்வகிக்க வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு, மக்களவையில் கடந்தாண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இது சிறுபான்மையினருக்கு எதிராக உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியதால், பா.ஜ.க. எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையிலான கூட்டுக் குழு ஆய்வுக்கு இந்த சட்ட திருத்த மசோதா அனுப்பப்பட்டது.

இதில் அனைத்து தரப்பினரின் கருத்துகளும் ஆலோசிக்கப்பட்டன. தே.ஜ. கூட்டணி கட்சி உறுப்பினர்கள் தெரிவித்த 14 திருத்தங்களுக்கு கூட்டுக்குழு ஒப்புதல் அளித்தது. அதன்பின் 655 பக்க அறிக்கை தயாரானது. இதற்கு எதிர்க்கட்சியைச் சேர்ந்த 11 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பெரும்பான்மை ஓட்டு அடிப்படையில் அந்த அறிக்கையை கூட்டுக் குழு ஏற்றுக்கொண்டது. கூட்டுக் குழுவின் அறிக்கையை அதன் உறுப்பினரான பா.ஜ.க. எம்.பி. மேதா விஷ்ராம் குல்கர்னி மாநிலங்களவையில் கடந்த மாதம் 13-ம் தேதி தாக்கல் செய்தார்.

இதேபோல் கூட்டுக்குழுவின் அறிக்கை மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டது. வக்பு வாரியத்தில்,முஸ்லிம் அல்லாத நபர்களை 4 பேர் வரை சேர்க்க கூட்டுக்குழு அறிக்கையில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது. பிரச்சினைகளை விசாரிக்கும் அதிகாரத்தை மாவட்ட கலெக்டர்களிடம் இருந்து மாநில அரசால் நியமிக்கப்படும் மூத்த அதிகாரிக்கு மாற்றவும் கூட்டுக்குழு பரிந்துரை செய்துள்ளது.

மாநில வக்பு வாரியங்கள், முஸ்லிம் ஓ.பி.சி. பிரிவில் இருந்து ஒரு உறுப்பினரை சேர்க்க முடியும். இதன் மூலம் அனைத்து தரப்பு பிரதிநிகளும் வக்பு வாரியத்தில் இடம் பெறுவது உறுதி செய்யப்படுகிறது. இந்த மாற்றங்கள் மூலம் கடுமையான விதிமுறைகளுடன், வக்பு வாரிய சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்படும்.

இதையடுத்து கூட்டுக்குழுவில் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவில் சேர்க்கப்பட்டன. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து, அடுத்த வாரம் இந்த மசோதா மக்களவையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக சட்டப்பேரவையில் நாளை தமிழ்நாடு அரசு தனித் தீர்மானம் கொண்டு வருகிறது. வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு கைவிடக் கோரும் தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வக்பு சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து, கேரளா மாநில அரசு கடந்த ஆண்டு அக்டோபரில் தீர்மானம் நிறைவேற்றியது. இதேபோல கர்நாடகா அரசுன் இந்த மாதம் வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தனித் தீர்மானம் நிறைவேற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article