லெபனான் நாட்டுக்குள் நுழைந்த இஸ்ரேல் படைகள்...? ஹிஸ்புல்லா மறுப்பு

2 hours ago 3

ஜெருசலேம்,

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு கடுமையாக தாக்குதல் நடத்தியதில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்து செல்லப்பட்டனர். எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. தொடர்ந்து மற்றவர்களை மீட்கும் நோக்கில் காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது.

பல மாதங்களாக நடந்து வரும் மோதலில் 43 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர் என்று காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேலை தாக்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டது. இதில், அடுத்தடுத்து பலர் கொலை செய்யப்பட்டனர். ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார். அடுத்து, ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர் என்பவரை இஸ்ரேல் தாக்கி அழித்தது.

இந்நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை பெய்ரூட் நகரில் வைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த வெள்ளி கிழமை தாக்குதல் நடத்தி கொலை செய்தது. எனினும், இந்த தாக்குதலில் பொதுமக்களில் 6 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்து இருந்தது.

இதனை ஹிஸ்புல்லா அமைப்பும் கடந்த செப்டம்பர் 28-ந்தேதி உறுதி செய்தது. தொடர்ந்து, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், எதிரிக்கு எதிரான புனித போரை தொடர்ந்து மேற்கொள்வோம் என அந்த அமைப்பு உறுதிமொழி எடுத்திருந்தது.

இந்த சூழலில், ஹிஸ்புல்லா அமைப்பின் தடுப்பு காவல் பிரிவின் தளபதி மற்றும் அவர்களுடைய செயற்குழுவின் உறுப்பினரான நபில் குவாவக் என்பவரை இஸ்ரேல் ராணுவம் தாக்கி அழித்தது. தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட செய்தியில், ஹிஸ்புல்லா அமைப்பில் உள்ள தளபதிகளை கொல்வதற்காக தொடர் தாக்குதல் நடத்தப்படும். இஸ்ரேல் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் யாருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தது.

நஸ்ரல்லா கொல்லப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக புதிதாக வேறொரு தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை நயீம் காசிம் துணை பொது செயலாளராக செயல்படுவார் என தகவல் தெரிவித்தது. ஹிஸ்புல்லா அமைப்பின் துணை தலைவரான பின் தொலைக்காட்சியில் தோன்றி முதன்முறையாக காசிம் நேற்று பேசினார்.

அவர் பேசும்போது, இஸ்ரேல் தரைவழியே தாக்குதல் நடத்த முடிவெடுத்து விட்டால், லெபனானை பாதுகாக்க, போராட ஹிஸ்புல்லா அமைப்பின் போராளிகள் தயாராக உள்ளனர் என்றார். இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ந்து போரிடுவோம் என உறுதி கூறிய அவர், நீண்டகால போருக்கு தயாராக இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில், லெபனான் மீது தரைவழி தாக்குதலை நடத்த இஸ்ரேல் தயாராகி விட்டது என தகவல் வெளியானது. அவர்கள் லெபனான் நாட்டுக்குள் நுழைந்து விட்டனர் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பின் செய்தி தொடர்பாளர் முகமது அபிபி இன்று வெளியிட்ட அறிவிப்பில், லெபனான் நாட்டுக்குள் இஸ்ரேல் படைகள் நுழைந்து விட்டன என்பது பொய்யான தகவல் என்றார். லெபனான் நாட்டிற்குள் நுழைய முயற்சிக்கும் எதிரி படைகளை நேரடியாக எதிர்கொள்ள ஹிஸ்புல்லா போராளிகள் தயாராக உள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேலின் மத்திய பகுதியில் நடுத்தர ரக ஏவுகணைகளை வீசி ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதுபற்றி குறிப்பிட்ட அவர், இது ஒரு தொடக்கம் மட்டுமே என கூறியுள்ளார்.

Read Entire Article