லட்சங்களை அள்ளித்தரும் நாட்டுக்கோழிகள்!

1 month ago 10

கால்நடை வளர்ப்பிலேயே கோழி வளர்ப்பு சற்று எளிதானது. இந்தக் காரணத்தினால்தான் ஆடு, மாடுகளை விட கோழி வளர்ப்பில் ஈடுபட பல இளைஞர்கள் விரும்புகிறார்கள். குறிப்பாக வங்கதேசத்தை பூர்வீகமாக கொண்ட சோனாலி கோழிகளை வளர்ப்பதில் தமிழக இளைஞர்கள் அதிகளவில் ஈடுபாடு காட்டுகிறார்கள். இதில் கிடைக்கும் வருமானம் அபரிமிதமான வருமானம் இதற்கு முக்கிய காரணம். அந்த வகையில் சேலம் மாவட்டம், மன்னார்பாளையம் பிரிவு ரோட்டை அடுத்த அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த பலமுருகன் என்பவர் சோனாலி, சிறுவிடை, கடக்நாத் கோழிகளை வளர்த்து லட்சங்களில் லாபம் பார்த்து வருகிறார். இந்தத் தகவலை அறிந்து பாலமுருகனைச் சந்தித்து பேசினோம்.

“பி.ஏ வரை படித்த நான் தனியார் வங்கியில் கிரெடிட் கார்டு செக்சனில் வேலை பார்த்தேன். அந்த சமயத்தில் பொழுதுபோக்குக்காக கோழிகளை வாங்கி வளர்க்கத் தொடங்கினேன். அதிலும் சண்டை செய்யும் கத்திக்கட்டு, விசிறிவால் ரக கோழிகளை வளர்த்தேன். கொரோனாவிற்கு பிறகு வேலையை விட்டுவிட்டு கோழி வளர்ப்பில் முழுமையாக ஈடுபட ஆரம்பித்தேன். என்னுடைய நண்பர் ரஃபிக் என்பவருக்கும் என்னைப் போலவே கோழி வளர்ப்பில் ஆர்வம் அதிகம். அவர் மூலமாக கருங்கோழிகளை வாங்கி வளர்க்க ஆரம்பித்தேன். சேலம் செவ்வாய்பேட்டையில் இருக்கும் ஒரு ஆட்டோ ஓட்டுநரின் உதவியோடு 50 கருங்கோழிக் குஞ்சுகளை வாங்கினோம். இதில் நான் 20 கோழிக்குஞ்சுகளை வைத்து கொண்டு ரஃபிக்கு 30 கோழிக்குஞ்சுகளைக் கொடுத்தேன். அப்போது அவை கருங்கோழி என்பதே எனக்கு தெரியாது. வளரும் போதுதான் அது கருங்கோழி என தெரிந்து கொண்டேன். இந்த 20 கோழிக்குஞ்சுகள் மூலம் தற்போது 100 தாய்க் கருங்கோழிகளை வளர்த்து வருகிறேன்.

சரி முழுவதும் கோழி வளர்ப்பு என்றாகிவிட்டது. அதனால் சராசரியான வருமானம் தரக்கூடிய சோனாலி, சிறுவிடை நாட்டுக்கோழிகளையும் வளர்க்கத் தொடங்கலாம் என்று நினைத்தேன். சேலத்தைச் சுற்றி இருப்பவர்கள் மற்றும் ஒசூர் கெலமங்கலத்தைச் சேர்ந்தவர்களிடம் சோனாலி, சிறுவிடை நாட்டுக்கோழிக் குஞ்சுகளை வாங்கி வந்து வளர்க்க ஆரம்பித்தேன். ஒரு சென்டில் தொடங்கிய கோழி வளர்ப்பு இன்றைக்கு 10 சென்ட் என விரிவடைந்துள்ளது. சோனாலி, கருங்கோழி, சிறுவிடை என்று தற்போது 700 தாய்க் கோழிகள் இருக்கின்றன.

கோழிகளுக்கு தீவனம் வழங்குவதில் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். மேய்ச்சலில் இருக்கும் கோழிகளுக்கு அவை எடுக்கும் இரையே போதுமானது. நாம் கூடுதலாக கம்பு அல்லது அரிசி, கோதுமை கொடுக்கலாம். அதுவே பண்ணை முறை கோழியாக இருந்தால் அவற்றிற்கு பண்ணை தீவனம்தான் சரிப்பட்டு வரும். ஆரம்பக் காலத்தில் கோழிகளுக்கான தீவனத்தை நானே தயார் செய்து கொடுத்தேன். இன்றைக்கு கடலைப் புண்ணாக்கு ஒரு கிலோ ரூ.70க்கு விற்பனையாகிறது. இதை வாங்கி வந்து மக்காச்சோளம், கம்பு, அரிசி, கோதுமை, கேழ்வரகு கொடுத்தால் பணம் ஏகத்துக்கு செலவாகும். இதை தவிர்ப்பதற்காகத்தான் பண்ணைத் தீவனத்தைக் கொடுத்து வருகிறேன்.சோனாலி கோழிகள் ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட 230 முட்டைகள் வரை இடும். அசில் கிராஸ், பெருவிடைக் கோழிகளை ஒரு கூண்டுக்குள்ளோ, கொட்டகைக்குள்ளோ வைத்து வளர்த்தால் அவை ஒன்றையொன்று கொத்திக் கொள்ளும். இதனால் கோழிகளுக்கு நோய் வரக்கூடும்.

ஆனால் கடக்நாத், சோனாலி ரக கோழிகள் ஒன்றை ஒன்று கொத்திக் கொள்ளாது. இவைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம். பிறந்து ஒரு மாதம் வரை கோழிக் குஞ்சுகளுக்கு உரிய தடுப்பு மருந்து கொடுத்து பராமரித்தாலே போதும். சுத்தமான தண்ணீர், சரியான பராமரிப்பு இருந்தால் கண்டிப்பாக கோழிகளில் நல்ல வருமானம் பார்க்கலாம். கடக்நாத் கோழிகளை ஒரு பெட்டைக்கு ஒரு சேவல் என்ற கணக்கில் பராமரிக்கிறேன். சோனாலி, சிறுவிடை கோழிகளுக்கு 7 பெட்டைக்கு 1 சேவல் என்ற கணக்கில் வைத்திருக்கிறேன்.

கோழிகள் இடும் முட்டையை நான் விற்பனை செய்வது கிடையாது. முட்டைகள் அனைத்தையும் இன்குபேட்டரில் வைத்து குஞ்சுகளாக பொரித்த பின்பு ஒரு நாள், ஒரு மாதம், மூன்று மாத கோழிக்குஞ்சுகளாக விற்பனை செய்கிறேன். ஒருநாள் வயதுடைய கோழிக்குஞ்சுகளை மாதத்திற்கு 12,000 எண்ணிக்கையில் விற்பனை செய்கிறேன். ஒரு கோழிக்குஞ்சின் விலை சராசரியாக ரூ.38. இதன்மூலம் ஒரு மாதத்திற்கு ரூ.4.56 லட்சம் வருமானமாக கிடைக்கிறது. ஒரு மாதத்திற்கு 6000 ஒரு மாத கோழிக்குஞ்சுகள் சராசரியாக விற்பனையாகும். ஒரு கோழியை சராசரியாக ரூ.100 என்ற கணக்கில் விற்பனை செய்கிறேன். அந்த வகையில் ஒரு மாதத்திற்கு ரூ.6 லட்சம் கிடைக்கிறது. வளர்ப்பிற்காக கோழி வேண்டும் என்று கேட்பவர்களுக்கு மூன்று மாத கோழியை ஒரு கிலோ ரூ.350 என்ற கணக்கில் விற்பனை செய்கிறேன். இதன்மூலமும் ஒரு குறிப்பிட்ட வருமானம் கிடைக்கிறது. தீவன செலவு ரூ.3 லட்சம், வண்டி வாடகை ரூ.1 லட்சம், ஆட்கள் கூலி ரூ. 1.5 லட்சம் போக ரூ. 5.06 லட்சம் லாபமாக கிடைக்கிறது. கோழிக்குஞ்சுகள் தேவைப்படுவோருக்கு 100 என்ற எண்ணிக்கையில் டிரான்ஸ்போர்ட் வசதியுடன் கொடுத்து வருகிறேன்’’ என்கிறார்.
தொடர்புக்கு:
பாலமுருகன்: 95668 15797

The post லட்சங்களை அள்ளித்தரும் நாட்டுக்கோழிகள்! appeared first on Dinakaran.

Read Entire Article