லக்னோ : லக்னோ விமான நிலையத்தில் சவூதி அரேபிய விமானத்தில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விமானி சாதுர்யமாக செயல்பட்டு தரையிறக்கியதால் பெரும் விமான விபத்து தவிர்க்கப்பட்டது. விமானத்தில் பயணித்த 250 பேரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இருந்து லக்னோவிற்கு 250 பயணிகளுடன் ஏர்பஸ் ஏ330-343 பயணிகள் விமானம் ஒன்று நேற்று இரவு 10.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டது. இந்த விமானத்தில் பெரும்பாலும் ஹஜ் புனித யாத்திரை சென்ற பயணிகளே இருந்தனர். அவர்கள் மெக்கா, மெதீனாவில் புனித யாத்திரை மேற்கொண்டு தாயகம் திரும்பினர்.
இந்நிலையில், இன்று காலை விமானம் லக்னோ விமான நிலையத்தில் தலையிறங்க முற்பட்ட போது அதன் இடது சக்கரப் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறத் தொடங்கியது.இதனால் அதிர்ச்சிக்குள்ளான விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு விபரீதத்தை உணர்த்தினார். இதையடுத்து விமானம் பத்திரமாக தரையிறங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்வாறு சாதுரியமாக செயல்பட்ட விமானி, விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.லக்னோ சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கியதும் அதிலிருந்து 250 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில் ஹைட்ராலிக் சிஸ்டம் கசிவு காரணமாக விமானத்தின் சக்கரப் பகுதியில் கரும்புகை வெளியேறியது தெரியவந்துள்ளது.
The post லக்னோ விமான நிலையத்தில் சவூதி அரேபிய விமானத்தில் தீப்பிடித்ததால் பரபரப்பு : 250 பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்!! appeared first on Dinakaran.