மும்பை: வங்கிகளின் குறுகியகால கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.5% குறைத்தது. வட்டி விகிதம் 0.5% குறைக்கப்பட்டதை அடுத்து ரெப்போ வட்டி விகிதம் 6%ல் இருந்து 5.5%ஆக குறைந்தது. ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை மறு சீராய்வு கூட்டத்தை நடத்தி, வட்டி நிர்ணயம் உள்ளிட்ட முக்கிய கொள்கை முடிவுகளை எடுக்கிறது. நடப்பு மாதத்துக்கான சீராய்வுக் கூட்டம், ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா தலைமையில் நடந்து முடிந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா அறிவித்தார்.
இதன்படி, ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி 0.5 சதவீதம் குறைத்து 5.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், வீடு, வாகன, தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கலாம்.2020 மே மாதத்துக்குப் பிறகு, முதல் முறையாக கடந்த பிப்ரவரி மாதம் ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி 0.25% குறைத்தது. தொடர்ந்து ஏப்ரல் மாதமும் வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டது. தற்போது 3வது முறையாக வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி, ஏப்ரல், ஜூன் ஆகிய மாதங்களைச் சேர்த்து 1% ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா, “இந்திய பொருளாதாரத்தின்
அடிப்படை வலுவாக உள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் நடப்பாண்டில் 6.5 சதவீதமாக இருக்கும். சில்லறை விலை பண வீக்கம் 3.16 சதவீதமாக உள்ளது,”இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து, நகைக்கடன் விதிமுறை தொடர்பான சு.வெங்கடேசன் கடிதத்துக்கு ஆர்பிஐ ஆளுநர் மல்கோத்ரா அளித்த பதிலில், “நகைக்கடன் தொடர்பான மக்களின் ஆலோசனைகள் பரிசீலிக்கப்பட்டே இறுதி செய்யப்படும். தற்போது வெளியிடப்பட்டு இருப்பது நகல் விதிமுறைகளே; கருத்துக்கள் கணக்கில் கொள்ளப்படும். சிறு கடன்தாரர்கள் உள்ளிட்டோர் நலன்களும் கருத்தில் கொள்ளப்படும்”இவ்வாறு குறிப்பிட்டார்.
The post ரெப்போ வட்டி விகிதத்தை 5.5% ஆக குறைத்தது ரிசர்வ் வங்கி : வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும்!! appeared first on Dinakaran.