சென்னை: திருவல்லிக்கேணியில் கடந்த டிசம்பர் மாதம் 15ம் தேதி தனியார் நிறுவன ஊழியர் முகமது கவுஸ் என்பவரிடம் ரூ.20 லட்சத்தை வழிப்பறி செய்த வழக்கில், காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜா சிங், சன்னிலாய்டு, வருமானவரித் துறை அதிகாரிகள் தாமோதரன் பிரதீப், பிரபு ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளனர். இந்த வழக்கில் சன்னிலாய்டு தவிர மற்ற 4 பேருக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில் சன்னிலாய்டுவிடம் காவல்துறை விசாரணை செய்ததில் சென்னை ஆயிரம் விளக்கு காவல் எல்லைக்கு உற்பட்ட பகுதியில் ராயபுரத்தை சேர்ந்த தமீம் அன்சாரி என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் 11ம் தேதி கொண்டு வந்த ரூ.40 லட்சத்தை வாங்கி அதில் ரூ.20 லட்சத்தை எடுத்துக்கொண்டு ரூ.20 லட்சத்தை திரும்ப கொடுத்தது தெரியவந்தது. இந்த குற்றத்தில் உதவி ஆய்வாளர்கள் ராஜா சிங், சன்னிலாய்டு, வருமானவரித் துறை அதிகாரிகள் தாமோதரன் பிரதீப், பிரபு, வணிகவரித்துறை அதிகாரிகள் சுரேஷ், சதீஷ், பாபு ஆகியோருக்கு தொடர்பு உள்ளதாக தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் பதிவு செய்த இந்த வழக்கில் ராஜா சிங், சன்னிலாய்டு, வருமானவரித் துறை அதிகாரிகள் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி, வருமானவரித் துறை அதிகாரிகள் தாமோதரன், பிரதீப், பிரபு மனுவை தள்ளுபடி செய்து முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜாசிங், சன்னிலாய்டு ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.மனுக்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான மாநகர குற்றவியல் வழக்கறிஞர், ஜி.தேவராஜன், இந்த வழக்கின் விசாரணை இன்னும் நிறைவடையவில்லை. இந்த மோசடியில் காவல்துறை, வருமானவரி துறை, வணிக வரிதுறை அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது.
எனவே முழுமையாக விசாரிக்க வேண்டும். சில முக்கியமாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இன்னும் பலரிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் புகார் அளிக்க தயாராக உள்ளனர். சன்னிலாய்டு ஒப்புதல் வாக்குமூலத்தில் ரூ.20 லட்சத்தை குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் பகிர்ந்து கொண்டுள்ளனர். எனவே தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க கூடாது என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விசாரணை முடிவடையாததால் தற்போதைய நிலையில் மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
The post ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கு 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.