கொழும்பு : எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கைதான 13 மீனவர்களுக்கு தலா ரூ.50,000 அபராதம் விதித்தது இலங்கை நீதிமன்றம். ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த டிசம்பர் 24-ம் தேதி மீன்பிடிக்க சென்ற 17 பேரை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த நிலையில் சிறை பிடிக்கப்பட்ட 17 பேரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களில் 13 பேர் ரூ.50,000 அபராதம் செலுத்தினால் விடுதலை செய்யப்படுவார்கள் என்று மன்னார் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ரூ.50,000 கட்டினால் மட்டுமே விடுதலை என்ற உத்தரவு ராமேஸ்வரம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரில் 2 பேருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது இலங்கை நீதிமன்றம். 2 மீனவர்களும் படகோட்டி என்பதால் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2 மீனவர்களின் கைரேகை பதிவு தவறாக இருந்ததால் அவர்களின் வழக்கு மட்டும் பிப்.12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி குறிப்பிட்டார். இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வரும் நிலையில் மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவ்வப்போது முதல்வர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி வருகிறார். ஆனால் மத்திய அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
The post ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரில் 2 பேருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை: 13 மீனவர்கள் ரூ.50,000 அபராதம் கட்டினால் விடுதலை!! appeared first on Dinakaran.