ராமேஸ்வரம் கடற்கரையில் கரை ஒதுங்கும் விஷ ஜெல்லி: உடல் அலர்ஜியால் மீனவர்கள் பீதி

10 hours ago 2

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கடலில் நூற்றுக்கணக்கான ஜெல்லி மீன்கள் இறந்து கரை ஒதுங்கியதால் மீனவர்கள் பீதியடைந்தனர்.
ராமேஸ்வரம் கடலில் திடீரென நூற்றுக்கணக்கான சொறி மீன் எனப்படும் ஜெல்லி மீன்கள், நேற்று முதல் கடற்கரையோரங்களில் இறந்து கரை ஒதுங்க துவங்கியுள்ளது. பொதுவாக ஜெல்லி மீன்கள் அழகானதும், ஆபத்தானதும் கூட. இதில் பல வகைகள் உள்ளன. இது அகலம் 5 செ.மீ முதல் 3 அடி வரை இருக்கும்.

இதன் உடற்தோற்றம் மைய அச்சில் இருந்து வட்டமாக வரையப்பட்டதை போன்று குடை வடிவமானது. இதன் மொத்த உடற்பகுதியில் 5 சதவீதம் மட்டுமே திடப்பொருளாகும். மீதியனைத்தும் திரவப்பொருளான நீரால் இருக்கும். உணர்கொம்புகளை கொண்டு குத்தும் ஆற்றல் பெற்றவை. இதிலிருந்து வரும் நச்சுகள் மனித உடலில் படும்போது சிரங்கு, சொறி, அழற்சியை உண்டாக்குவதால் தான், இவைகளுக்கு ‘சொறிமீன்’ என்ற பெயர் உருவாகியது.

இதில் ஒரு சில அரியவகை விஷ சொறி மீன்களும் உள்ளன. அது கொட்டினால் மனித உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலையும் உள்ளது.
ராமேஸ்வரம் கடலில் தற்போது கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள் மனிதர்களுக்கு உடலில் அலர்ஜியை ஏற்படுத்தும் வகையை சேர்ந்தது. சேராங்கோட்டை முதல் கோதண்டராமர் கோயில் எதிரே கடற்கரை வரை 5 கி.மீ நூரத்திற்கு நூற்றுக்கணக்கான ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கி கிடக்கின்றன.

இதில் பல ஜெல்லி மீன்கள் கடல் அலையில் சிக்கி சிதைந்து மீண்டும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்படுகிறது. இது கரைவலை மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்கள் வலையில் இந்த ஜெல்லி மீன்கள் அதிகமாக சிக்குகின்றன. இதனால் அப்பகுதி மீனவர்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் பலருக்கும் சொறி மீன் கடித்து அலர்ஜி ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள் பீதியடைந்துள்ளனர். மீன் ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ராமேஸ்வரம் கடற்கரையில் கரை ஒதுங்கும் விஷ ஜெல்லி: உடல் அலர்ஜியால் மீனவர்கள் பீதி appeared first on Dinakaran.

Read Entire Article