ராமதாஸ் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு

1 day ago 2

விழுப்புரம்,

பா.ம.க.வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந்தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ராமதாஸ் தனது மகள் வழிப்பேரன் முகுந்தன் பரசுராமனை, பா.ம.க. இளைஞர் சங்கத் தலைவராக நியமித்து, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். இதற்கு, பொதுக்குழு மேடையிலேயே, அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ராமதாஸ் - அன்புமணி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இந்த சூழலில், கடந்த மாதம் 10-ந்தேதி அன்புமணி ராமதாசின் தலைவர் பதவியை பறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக தொடர்வார் என்றும் அறிவித்தார். அதேநேரம், கட்சியின் சட்ட விதிகள்படி நானே தலைவராக தொடர்வேன் என அன்புமணி ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்தார்.

சமீபத்தில், தர்மபுரி மாவட்டம் கடத்தூரில் கடந்த 24-ந் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், 'கட்சி பதவியில் இருந்து நான் ஏன் மாற்றப்பட்டேன். அப்படி நான் என்ன தவறு செய்தேன்' என மன வேதனையுடன் பேசினார். இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் நேற்று நிருபர்களை சந்தித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அன்புமணியை மத்திய மந்திரியாக்கி தவறு செய்துவிட்டதாக பரபரப்பு பேட்டி அளித்தார். இந்தநிலையில், திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்று அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ராமதாஸ் முன்வைத்த நிலையில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 காவலர்கள் உள்ள நிலையில் கூடுதலாக 5 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Read Entire Article