ராணுவ பலத்தை அதிகரிக்க நேட்டோ நாடுகள் முடிவு

6 hours ago 2

தி ஹேக்,

அமெரிக்கா உள்ளிட்ட 32 நாடுகள் இணைந்த நேட்டோ அமைப்பின் வருடாந்திர மாநாடு நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் நடந்தது. இதில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்பட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த மாநாட்டில் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. முக்கியமாக, நேட்டோ நாடுகளின் ராணுவ செலவினத்தை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, உறுப்பு நாடுகள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) 5 சதவீதத்தை ராணுவத்துக்கு செலவிட வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தி இருந்தார். இது குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

முடிவில் இந்த பரிந்துரைக்கு உறுப்பு நாடுகள் ஒப்புதல் தெரிவித்தன. பின்னர் இது தொடர்பாக மாநாட்டு முடிவில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், 'ராணுவ தேவைகள் மற்றும் பாதுகாப்பு மற்றும் அது சார்ந்த செலவினங்களுக்காக 2035-ம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்தை ஆண்டு தோறும் செலவிடுவதற்கு உறுப்பு நாடுகள் உறுதிபூண்டுள்ளன' என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த உறுதிப்பாட்டை 2029-ம் ஆண்டு மறு ஆய்வு செய்வதும், ரஷியாவால் நேட்டோ நாடுகளுக்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலை மறு மதிப்பீடு செய்வதும் இந்த பிரகடனத்தில் அடங்கும். இதைத்தவிர நேட்டோ நாடுகள் தங்கள் வழக்கமான பாதுகாப்பு உறுதிப்பாடான 'ஒருவர் மீதான தாக்குதல் அனைவருக்கும் எதிரான தாக்குதலாக' கருதப்படும் என்பதையும் சுட்டிக்காட்டின.

முன்னதாக இந்த இலக்கை தங்களால் எட்ட முடியாது என ஸ்பெயின் கூறியிருந்தது. இதைப்போல தங்களுக்கு சலுகை கேட்டு சில நாடுகள் குரல் எழுப்பி இருந்தன. பல உறுப்பு நாடுகள் பொருளாதார மந்த நிலையை சந்தித்து வருகின்றன. மேலும் டிரம்பின் பரஸ்பர வரி உயர்வு நடவடிக்கையும் அவற்றை வெகுவாக பாதித்து வருகின்றன. இதனால் அவை தயக்கம் காட்டி வருகின்றன.

அதேநேரம் மாநாட்டுக்கு செல்லும் வழியில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், நேட்டோ நாடுகள் ராணுவத்துக்கான செலவினத்தை அதிகரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்தை இதற்காக செலவிடுவது சிறப்பாக இருக்கும் எனக்கூறிய அவர், இது மேலும் அதிக வலிமையை வழங்கும் என்றும் கூறினார். நேட்டோ மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் கலந்து கொண்டார். ஆனால் பிரதான அரங்கில் அவரால் செல்ல முடியவில்லை. வெளியில் இருந்தே அவரால் மாநாட்டு நிகழ்வுகளை பார்க்க முடிந்தது. இதனால் அவர் ஏமாற்றத்துடன் காணப்பட்டார். 

Read Entire Article