
கோட்டா,
ராஜஸ்தானின் கோட்டா நகரில் வசித்து வந்தவர் தீபக் ரத்தோர். இவருடைய மனைவி ராஜேஷ் ரத்தோர். இந்த தம்பதிக்கு 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. அவர்களுக்கு 5 வயதில் மகள் இருக்கிறாள். தீபக்கிற்கு மொபைல் போனில் ஆன்லைன் வழியேயான விளையாட்டில் ஈடுபடும் வழக்கம் இருந்துள்ளது.
இதில் அவருக்கு ரூ.5 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், தன்னுடைய மூத்த சகோதரியிடம், மரணம் அடைவது தவிர வேறு வழியில்லை என கூறி அழுதுள்ளார்.
அப்போது, பணம் ஏற்பாடு செய்து தருகிறேன். கடனை அடைத்து விடலாம் என அவர் உறுதி கூறியதுடன், வேறு எந்த முடிவையும் எடுத்து விடாதே என சகோதரரிடம் கேட்டு கொண்டிருக்கிறார். ஆனால், தீபக் மற்றும் அவருடைய மனைவி இருவரும், அவர்கள் இருந்த அறையின் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளனர்.
இந்த நிலையில், தீபக்கின் தந்தை சத்ய நாராயண் ரத்தோர், கதவை தட்டியபோது தீபக்கின் அறையில் இருந்து பதில் ஏதும் இல்லை. இந்நிலையில், இந்த தம்பதியின் மகள் வந்து கதவை திறந்து விட்டுள்ளாள். உள்ளே சென்று பார்த்தபோது, அவர்கள் 2 பேரும் தற்கொலை செய்து இறந்து கிடந்தது கண்டு நாராயண் அதிர்ச்சி அடைந்து உள்ளார்.
இதுபற்றி கோட்டா நகர போலீஸ் சூப்பிரெண்டு சுஜீத் சங்கர் கூறும்போது, ஆன்லைன் விளையாட்டில் ஏற்பட்ட கடனே இந்த தம்பதியின் தற்கொலைக்கு காரணம் என சந்தேகிக்கப்படுகிறது. அனைத்து கோணங்களிலும் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.