
வாஷிங்டன்
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து வரி விதிப்பு விவகாரத்தில் கடும் கெடுபிடிகளை காட்டி வருகிறார். இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீதும் பரஸ்பர வரியை விதித்தார். தற்போது அந்த வரி விதிப்பை டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார்.
இந்த நிலையில்,ரஷியாவுடன் வர்த்தகத்தைத் தொடரும் நாடுகளுக்கு 500 சதவிகிதம் வரி விதிக்கும் புதிய மசோதா அமெரிக்காவில் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த மசோதா அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவுடன் அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளதாக குடியரசுக் கட்சி எம்பி லிண்ட்சே கிரஹாம் தெரிவித்துள்ளார்.
ரஷியாவை பொருளாதார ரீதியில் தாக்கும் விதமாக அமெரிக்கா இந்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த மசோதா ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மசோதா ஒருவேளை நிறைவேறினால், தள்ளுபடி விலையில் ரஷியாவிடம் கச்சா எண்ணெய்யை அதிகளவில் வாங்கக்கூடிய இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் அதிகளவில் பாதிக்கக்கூடும் என சொல்லப்படுகிறது.
அதாவது, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா 500 சதவீதம் அளவுக்கு வரி விதிக்க கூடும். இந்தியாவும், சீனாவும் 70 சதவிகிதம் அளவுக்கு கச்சா எண்ணெய் கொள்முதலை ரஷியாவிடம் இருந்தே மேற்கொள்கிறது.