
டிரானா [அல்பேனியா],
ரஷியா - உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த புதின் சம்மதம் தெரிவித்தார். ஆனால் போர் தாக்குதலை நிறுத்தாமல் இருநாட்டு பிரதிநிதிகளும் சந்தித்து பேச ஏற்பாடுகள் நடந்தன.
போருக்குப் பின் முதல் முறையாக இருநாட்டு பிரதிநிதிகளும் நேரடி அமைதிப் பேச்சுவார்த்தைக்காக நேற்று துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் கூடினர். பாதுகாப்பு மந்திரி ருஸ்டெம் உமெரோவ் தலைமையிலான உக்ரைன் தூதுக்குழு, ஜனாதிபதி உதவியாளர் விளாடிமிர் மெடின்ஸ்கி தலைமையிலான ரஷிய குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
துருக்கி நாட்டின் அதிகாரிகள் நடுநிலை வகித்தனர். 2 மணி நேரம் சந்திப்பு நடந்தது. இரு தரப்பினரும் அதிக எண்ணிக்கையில் கைதிகள் பரிமாற்றத்துக்கு சம்மதம் தெரிவித்தனர். இதன்படி சுமார் 1,000 போர்க்கைதிகள் பரிமாறிக் கொள்ளப்படுவார்கள் என தெரிகிறது. இருந்தபோதிலும் சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முக்கிய நிபந்தனைகளில் அவர்களிடையே கருத்து முரண்கள் நீடித்த நிலையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஐரோப்பிய தலைவர்களுடன் தொடர்ச்சியான சந்திப்புகளை நடத்தினார். இதன்படி ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் ஸ்வீடன் பிரதமர்களுடன் கலந்துரையாடினார்.
அப்ப்போது ரஷியா மீதான சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை ஜெலென்ஸ்கி வலியுறுத்தினார், மேலும் அமைதியை அடைவதற்கான முதல் படி போர்நிறுத்தம் என்றும் அவர் தெரிவித்தார். ராணுவ ஆதரவை வலுப்படுத்துதல், உக்ரைனின் வான் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உற்பத்தி திறன்களை மேம்படுத்துதல் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் பதவியை நோக்கிய உக்ரைனின் பாதையை விரைவுபடுத்துதல் ஆகியவற்றிலும் பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.